சென்னையில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் 7 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் இருந்து வருகின்றனர். இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக எண்ணும் எழுத்தும் பயிற்சி மையங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது.
இந்நிலையில் கோரிக்கை தொடர்பாக மூன்று நபர் கொண்ட குழுவின் அறிக்கை மூன்று மாதங்களில் பெறப்பட்டு தீர்வு காணப்படும் என மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் இதனை ஏற்க மறுத்து இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை இன்று அதிகாலை காவல்துறையினர் கைது செய்து மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர். உலக ஆசிரியர் தினமான இன்று ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டிய அரசு அதற்கு மாறாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக அரசின் கைது நடவடிக்கைக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. உடனடியாக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
கோரிக்கைகள் குறித்து குழு அமைப்பது, குழு அறிக்கைக்கு அவகாசம் வழங்குவது என கால நீட்டிப்பு செய்யாமல் உடனடியாக தீர்வு காண வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் வெளிப்படையாக தெரியும் நிலையில், விசாரணைக் குழு என காலதாமதம் செய்ய வேண்டாம்.
ஆசிரியர்களில் வேண்டியவர் வேண்டாதவர் என பாகுபாடு இல்லை. அனைவருமே இந்த அரசுக்கு வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உடனடியாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அன்புடன்... ந.ரெங்கராஜன்,
பொதுச்செயலாளர், TESTF இணைப் பொதுச்செயலாளர், AIPTF பொதுச்செயலாளர், WTTC
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.