அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி Admission of 50 BDS students allowed in Govt Dental College
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டில் 50 பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், இந்த கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த கல்லூரியில் நடப்பாண்டில் 50 பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதி கோரி இந்திய பல் மருத்துவக் கவுன்சிலிடம் (டிசிஐ) தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது.
கடந்த மாதம் கவுன்சில் அதிகாரிகள் கல்லூரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து சென்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டில் 50 பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “தமிழகத்தில் 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் நிலையில், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் இருந்தது.
இதை அதிகரிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு 50 பிடிஎஸ் இடங்களுக்கு அனுமதி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதன்மூலம் தமிழகத்தில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை மூன்றாகவும், பிடிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 250 ஆகவும் உயர்ந்துள்ளது” என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.