ஆசிரியரின் பானையில் தண்ணீர் பருகியதால் தாக்குதல்: பட்டியலின மாணவர் பலி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 14, 2022

ஆசிரியரின் பானையில் தண்ணீர் பருகியதால் தாக்குதல்: பட்டியலின மாணவர் பலி

ராஜஸ்தானில் தனியார் பள்ளியில் பட்டியலின மாணவர் ஒருவர் தன் ஆசிரியரின் பானையில் குடிநீர் பருகியதால் தாக்கப்பட்டார். அதில் காயமடைந்த அந்த மாணவர் பரிதாபமாகப் பலியாகினார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ளது சுரானா கிராமம். இதன் செய்லா காவல்நிலையப் பகுதியில் சரஸ்வதி வித்யா மந்திர் எனும் பெயரில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் இந்திர குமார் ( 9 வயது ) மெக்வால் என்ற மாணவர் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்தார். இவர் பட்டியலின மாணவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜுலை 20 ஆம் தேதி பள்ளி சென்ற மாணவர் இந்திர குமார் கடும் தாகம் ஏற்பட்டதால் வகுப்பிலிருந்த பானையில் குடிநீர் எடுத்துக் குடித்துள்ளார்.

அதன்பின்னர் தான் அப்பானை வகுப்பாசிரியரின் பானை என்பது மாணவனுக்குத் தெரிந்துள்ளது. இதை அறிந்த இந்திர குமாரின் ஆசிரியர் சஹைல்சிங்கி சின்னஞ்சிறு சிறுவன் என்றுகூட பாராமல் மாணவனைக் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதில் காதுகளின் ஜவ்வுகள் கிழிந்ததுடன் கடுமையான ஊமைக் காயங்களும் ஏற்பட்டுள்ளன. இதில் படுகாயமடைந்த சிறுவன் இந்திர குமார் உதய்பூரின் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. உடனே அருகிலுள்ள குஜராத்தின் அகமதாபாத் மருத்துவமனையில் இந்திர குமார் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த இந்திர குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, இந்திர குமாரின் மாமாவான கிஷோர் குமார், செய்லா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில், பள்ளியின் ஆசிரியர் சஹைல்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை மற்றும் எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புப் பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த சம்பவத்தால் சுரானா கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அப்பகுதியில் இணையதள சேவைகளை ரத்து செய்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெல்லோட் இந்திர குமார் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிவாரண உதவி அளித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் கெல்லோட் தனது ட்விட்டரில், ''செய்லா காவல்நிலையப் பகுதியில் தனது ஆசிரியரால் அடித்துக் கொல்லப்பட்ட மாணவர் மரணம் மிகவும் பரிதாபகரமானது. எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புப் பிரிவில் பதிவான இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டி ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தரப்படும்.

குற்றவாளி அடையாளம் காணப்பட்டு வழக்குகள் பதிவாகி கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.