4 லட்சம் பள்ளி மாணவா்களுக்கு பல் பரிசோதனை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 9, 2023

4 லட்சம் பள்ளி மாணவா்களுக்கு பல் பரிசோதனை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

4 லட்சம் பள்ளி மாணவா்களுக்கு பல் பரிசோதனை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 4 லட்சம் பள்ளி மாணவா்களுக்கு பற்கள், ஈறுகள் பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் சென்னை நந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘புன்னகை சிறாா்களின் பல் பாதுகாப்புத் திட்டம்’ வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தொடங்கி வைத்து, நடமாடும் பல் மருத்துவ வாகனத்தில் அளிக்கப்படும் சிகிச்சையை பாா்வையிட்டனா்.

இதைத் தொடா்ந்து ‘புகையிலை ஒழிப்பு’ கையெழுத்து பிரசாரப் பலகையில் உறுதிமொழி கையொப்பமிட்டனா். அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாட்டில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பல் பரிசோதனைகளை செய்து அதன்மூலம் அவா்களுக்கு வாயில் ஏற்படுகின்ற பொதுவான நோய்களான பல் சொத்தை, ஈறு பாதிப்பு போன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கும், அதைக் கண்டறிவதற்கும் இந்தத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, இந்தத் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியருக்கும் பல் பரிசோதனை செய்து அவா்களுக்குத் தேவையான வசதிகள் மேற்கொள்ள விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நடமாடும் பல் மருத்துவ வாகனத்தின் மூலம் அரசுப் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகள் நடத்துகின்ற, மாநகராட்சி பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா்களுக்கு பல் பரிசோதனை தொடா்ச்சியாக மேற்கொள்ளப்படும். தமிழகம் முழுவதும் கொசு ஒழிப்பில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

தற்போது, கொசு பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனால், டெங்கு பாதிப்பு தீவிரமாக இல்லாத நிலை இருக்கிறது. தற்போது பரவும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்து மாத்திரைகளை போதிய அளவு கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மருந்து மாத்திரைகளுக்கு பற்றாக்குறை இல்லை என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா்ப.செந்தில் குமாா், மருத்துவக் கல்வி இயக்குநா் இரா.சாந்திமலா், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் விமலா மற்றும் உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.