பிளஸ் 1 மாணவர்களுக்கு அக்.15ல் இலக்கிய திறனறி தேர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 11, 2022

பிளஸ் 1 மாணவர்களுக்கு அக்.15ல் இலக்கிய திறனறி தேர்வு

தமிழ் இலக்கிய திறனறி தேர்வில், தமிழ் ஆசிரியர்களை கண்காணிப்பாளர்களாக நியமிக்க, அரசு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ் இலக்கிய திறனறி தேர்வு, இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வில், அனைத்து பாடத்திட்ட மாணவர்களும் பங்கேற்கலாம்.மதிப்பெண்ணில் முன்னிலை பெறும், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதம் 1,500 ரூபாய் வீதம் இரண்டு வருடங்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, முதல் தமிழ் இலக்கிய திறனறி தேர்வு, அக்., 15ம் தேதி மாநிலம் முழுதும் நடக்கிறது; 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை, பள்ளிகளின் வழியே மாணவர்களுக்கு வழங்க, அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு மையங்களில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் என்றும், அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இயக்குனர் சேதுராம வர்மா சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

காலை, 10:00 மணி முதல் 12:00 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வு நேரம் முடியும் வரை, மாணவர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை.

கணினி வழியில் திருத்தும் வகையில், ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் சரியான விடைகளை மட்டும் கருப்பு நிற பந்துமுனை பேனாவால் நிழற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு தேர்வறையிலும், 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வறைகளில் தமிழ் மொழி ஆசிரியர்களை மட்டும் கண்காணிப்பாளர்களாக நியமிக்க கூடாது.

ஓ.எம்.ஆர்., தாள் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பதிவெண்ணுக்கு உரியதா என, உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்வில் எந்த முறைகேடுக்கும் இடம் அளிக்க கூடாது. வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை கவனமாக, பாதுகாப்பாக கையாள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.