“நான் முதல்வன்” திட்டத்தில் பயன்பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 15, 2023

“நான் முதல்வன்” திட்டத்தில் பயன்பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் “நான் முதல்வன்” திட்டத்தில் பயன்பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

செய்தி வெளியீடு எண் : 311

நாள்: 15.02.2023

செய்தி வெளியீடு

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் “நான் முதல்வன்” திட்டத்தில் பயன்பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய 'நான் முதல்வன்' என்கிற புதிய திட்டத்தை 1.3.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித் திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் "கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று (15.2.2023) சேலத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் கல்லூரி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சிகள் பெற்றுவரும் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள், இத்திட்டத்தின் மூலம் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான Cloud Computing. Data Analytics, Machine Learning, BIM Modelling, High Rise Building, Steel Structures, Electric Vehicle Charging System Design, Artificial Intelligence, Robotics போன்ற திறன் பயிற்சிகள் பெற்ற அனுபவத்தையும், அவை அவர்களுடைய வேலை வாய்ப்பிற்கு எவ்வாறு பயன்பெற்றது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். பன்னாட்டு நிறுவனங்களான IBM, Microsoft, TCS, Infosys, Google, AWS, L&T போன்றவற்றுடன் இணைந்து உலகத் தரத்திலான பயிற்சிகளை கட்டணமின்றி கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில் அமைந்த “நான் முதல்வன்" திட்டம், கல்வி பயிலும் பருவத்திலேயே பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்தது குறித்தும் விவரித்தனர். மேலும், படிக்கும்பொழுதே உயர்தொழில்நுட்பம் சார் தொழில் முனைவை ஊக்குவித்தும், அதன்மூலம் அவர்களுடைய பொருளாதாரம் மேம்படவும், வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப உலகத்திற்கு ஏற்ற திறன் பயிற்சிகளை “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் வழங்குவதன் மூலம் மாணவ சமுதாயத்திற்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இச்சிறப்பான திட்டத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நெஞ்சார்ந்த நன்றியினை அம்மாணவ, மாணவியர் அவர்களுக்கு தங்களது தெரிவித்துக் கொண்டனர். இந்த கலந்துரையாடலின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. எஸ். கார்மேகம், இ.ஆ.ப., சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளர் திரு. த. உதயச்சந்திரன், இ.ஆ.ப., தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.