மறத்தல் தகுமோ? மறுத்தல் முறையோ? மாண்புமிகு முதல்வரே! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 18, 2022

மறத்தல் தகுமோ? மறுத்தல் முறையோ? மாண்புமிகு முதல்வரே!

மறத்தல் தகுமோ? மறுத்தல் முறையோ? மாண்புமிகு முதல்வரே!

மறக்க முடியுமா என்ற படத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒரு பாடலை எழுதியிருப்பார் "காகித ஓடம் கடலலை மீது போவது போலே...' என்ற பாடல். அந்தப்பாடல் இன்றைய நிலையில் அரசு ஊழியர் ஆசிரியர் போன்ற உழைக்கும் வர்க்கத்தினருக்கு இன்றைய நிலையில் பொருத்தமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. "மறக்க முடியுமா?" தமிழக முதல்வருக்கு மிகப் பொருத்தமானதாகவே இருக்கும்,

ஒரு மாநில அரசில் பணிபுரியும் ஐஏஸ். ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பிரிவு அதிகாரிகள் மட்டும் அரசின் அனைத்து உரிமைகளையும் அனுபவித்துக் கொள்வதும், கஜானாவில் உள்ள நிதிகளை வயிறுமுட்ட வழித்தெடுத்துக் கொள்வதும், அவர்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவை மறுக்கப்பட்டு நிதிநிலை மோசமாக உள்ளது என்று நீலிக்கண்ணீர் வடிப்பதும் எத்தனை ஆட்சியாளர்கள் மாறினாலும் மாறாத காட்சியாக நிலைபெற்று வருவது இந்த மாநிலத்தில் அரசமைப்பு சட்டத்தின்படியான மக்களாட்சி நடைபெறவில்லை என்பதை உணர்த்தும் விடயங்களாகும்.

தங்களுக்குண்டான உரிமைகளை சலுகைகளை ஒரு சல்லிக்காசு கூட குறையாமல் பெற்றுக்கொண்டிருக்கும் அதிகார வர்க்கம்தான் ஊழியர்களின் உரிமைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை தொடுத்து அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கேள்விகுரியதாக்கி வருகிறது. ஊழியர்களுக்கு இருக்கின்ற உரிமைகளை பறிக்கின்ற வேலைகளை அழுத்தந்திருத்தமாக செய்துவரும் அதிகார வர்க்கமும் அதை எதிர்த்து நின்று போராடும் ஊழியர்களைப் பார்த்து உங்களுக்கு போராட, வேலை நிறுத்தம் செய்ய உரிமையில்லை என்று தீர்ப்பெழுதும் நீதிமன்றங்களும்தான் சுதந்திர இந்தியாவின் சுடர்மணிகளாக திகழ்கின்றன. விலைவாசி உயர்வுக்கேற்ப வழங்கப்படும் அகவிலைப்படியும் கூட உயரதிகாரிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டு விடுவதும் அரசு ஊழியர்கள் அதையும்கூட ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தி பலமாதங்கள் கடந்தும் வாங்க இயலாத சூழ்நிலை உள்ளதும் ஆட்சியாளர்களும் உயரதிகாரிகளும் அரசு ஊழியர்கள் மீதும் எவ்வளவு அக்கரை) வைத்துள்ளார்கள் என்பதைத் காட்டும் காலக் கண்ணாடிகளாகும். அரசமைப்பு சட்டத்தால் வரையறுக்கப்பட்ட அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுதிபடுத்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கான உரிமைகளை இந்த நாட்டின் நிதியமைச்சர் ஒருவரே சமூக அநீதி என்று கூறுவது அற்பத்தனமான அரசியலின் உச்சமாகும்.

சரண் விடுப்பை பணமாக்கிக் கொள்ளும் உரிமை மறுப்பு, அகவிலைப்படி வழங்காதிருத்தல், ஆட்குறைப்பு, பணிபறிப்பு. துறை இணைப்பு, அவுட் சோர்சிங், துறைகள் தனியார்மயமாக்கல் என்று அரசு ஊழியர்கள் மீது அடுத்தடுத்த அடுக்கடுக்கான ஏவுகணைத் தாக்குதல்கள் அரசாங்கத்தால் தொடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை எதிர்த்துப் போராடும் ஊழியர் வர்க்கத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க நினைப்பதும் துறைசார்ந்த நடவடிக்கைகள் மூலம் முடக்கப் பார்ப்பதும் ஒரு சமூக நல மற்றும் மக்கள் நல அரசாங்கத்தின் மலிவான இராஜதந்திரங்களாக ஆகியிருக்கிறது இப்போது.

2003ஆம் ஆண்டு செல்வி ஜெயலலிதா தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தபோது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் சுருணாநிதி அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற வழிவகைகள் காணப்படும் என்றார். 2006ஆம் ஆண்டில் அவர் முதல்வராக வந்தபிறகு 2011 வரை பழைய ஓய்வூதியத் திட்டத்தை பற்றி வாய்திறக்காததோடு அரசு ஊழியர்களின் ஊதியமாற்றங்களில் நிகழ்ந்த குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். அதனால் 2011ல் தேர்தல் அறிக்கையில் செல்வி ஜெயலலிதா அதிமுக ஆட்சி அமைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் திரும்ப அமல்படுத்தப்படும் என தெரிவித்ததை நம்பி அரசு ஊழியர்கள் வாக்களித்தனர். 2011ல் இருந்து 2021 வரை அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் போராட்டங்களும் அதிமுக ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படாத நிலையில் 2011ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் அரசு ஊழியர் ஆசிரியர் சமுதாயத்திற்கு பாதுகாப்பு அரணாக நிற்பதாக கூறிக்கொண்டும் திமுக ஆட்சி அமைத்தால் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்ற திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உறுதிமொழியின்பால் நம்பிக்கைக் கொண்டு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்கள் வாக்குகள் மட்டுமல்லால் தங்கள் குடும்பத்தினர் உறவினர் மற்றும் நண்பர்களிடமும் திமுகவிற்கு வாக்களிக்க அறிவுறுத்தியதன் பேரில் திமுக தேர்தலில் வெற்றி பெற காரணமாக இருந்த பல முக்கிய காரணிகளில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பிரச்சாரமும் அளித்த வாக்குறுதிகளும் முக்கிய காரணம் என்பதை ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால் தேர்தல் முடிந்து பதவியேற்று சுமார் இரண்டாவது ஆண்டும் முடியும் நிலையிலும் திமுக தலைவர் பழைய ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பதோடு அதற்காக நிதியமைச்சரை வைத்து சட்டமன்றத்திலும் ஊடகங்களிலும் செய்துவரும் சமாளிப்புகள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் முதல்வரின் மீதான நம்பகத்தன்மையை குழிதோண்டி புதைத்துள்ளது. தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வுதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியதையும் அதைத் தொடர்ந்து சத்தீஸ்கர், ஜார்க்கண்ட, ராஜஸ்தான் மாநிலங்களும் தாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அதற்கான முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற. சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் பழைய ஓய்வூதித் திட்டததை அமல் படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அது சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள கடித நகலும் மிகச் சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தில் பதவியேற்ற காங்கிரஸ் அரசின் முதல்வர் கூட பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என ஊடகவியலாளர் முன்னிலையில் அறிவிப்பதையும் தாண்டி மாண்புமிகு முதல்வர் மெளனம் காப்பது உண்மையில் அவர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தோழனாக இருப்பேன் என்று சொன்ன வாக்குறுதிகளை பொய்யாக்குவதாக உள்ளது.

அதேபோல இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சமூக நீதி, இடஒதுக்கீட்டு கொள்கை, சமதர்ம கோட்பாடு உள்ளது இதுதான் திராவிடமாடல் என்று சொல்லிக்கொள்ளும் மாண்புமிகு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில்தான் அவற்றுக்கு எதிரான மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை எடுப்பதற்கான ஆணைகள் வெளிடப்பட்டு அதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டன. அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்களும், பல அரசியல் கட்சிளும் அவற்றை எதிர்த்த பிறகு அந்த ஆணைகளில் மாற்றம் செய்வதாக கூறி நிறுத்தப்பட்டுள்ளன. இவை இந்த ஆட்சியின் மீது வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகளாக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதோடு இனி வேலைவாய்ப்பு என்பது வெளிமுகமைகள் மூலமாக நடத்தப்படும் என்ற நடைமுறை இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருதாகவே கருத வேண்டியுள்ளது. ஆதனால் முதல்வர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தினருக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவைதானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிடமாடல் ஆட்சி என்பது நகைப்பிற்கிடமாக மாறி வருகிறதோ என்ற அச்ச உணர்வும் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்ட களம் கண்டுதான் மத்திய அரசுக்கு இணையான ஊதியம், மருத்துவப்படி, போனஸ், தனி ஊதியம், ஊதிய மாற்றம், மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் அதே நாளில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் வழங்கும் ஏற்பாடு. சிறப்பு நிலை ஊதிய குறைபாடு களைதல், நிபந்தனையின்றி தேர்வுநிலை வழங்குதல் போன்ற உரிமைகளை பெற்றுள்ளது. வீரஞ்செறிந்த போராட்டங்கள் மூலமாக அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பண்டிகை முன்பணம் பெறும் உரிமை, சரண்டர், பணிக்கொடை சேமநலநிதி குறைப்பு போன்றவற்றை மீளப்பெற்று வரலாறு படைத்துள்ள இயக்கம்தான் அரசு ஊழியர் இயக்கம்

கடந்த பதிமூன்று ஆண்டுகளாக தனிச் சங்கமாகவும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் இணைந்தும் புதிய பென்சன் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், காலிப்பணியிடங்களை நிரப்பிடக் கோரியும், சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், ஊர்ப்புற நூலகர், எம்.ஆர்.பி செவிலியர் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் தொகுப்பூதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம், சாலைப் பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக சேர்ப்பது அரசுத்துறைகளில் உள்ள கொத்தடிமை கூலிமுறைகளை ரத்து செய்து நிரந்தரப் பணியாளர்களை நியமித்தல் போன்ற கோரிக்கைகளுக்காக தொடர்ந்து இயக்கங்களும், மாநாடுகளும், மாநில செயற்குழு கூட்டங்களும், பிரதிநிதித்துவப் பேரவைகளும் நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.

இந்த ஆண்டு நடைபெறும் மாநில பிரதிநிதித்துவப் பேரவை ஒரு வித்தியாசமான பின்புலத்தில் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சென்ற ஆட்சியாளர்களுடன் இருந்த எதிர்மறைப் போக்குகள் இன்றி இந்த அரசுடன் சுமூக உறவு பேணி ஊழியர்களுக்கான உரிமைகளை பெறுவதற்காக அரசு ஊழியர்களுக்கான உரிமைகளை சலுகைகளை அவ்வப்போது ஞாபகமூட்டி இணக்கமான அணுகுமுறையில் உரிமைகளை பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுடன் சுமூகமான போக்கு இருப்பதாலேயே ஜாக்டோ - ஜியோவுடன் இணைந்து ஒரு பெரிய மாநாடு நடத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் சக்தி என்ன என்பதை அரசாங்கத்திற்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது இந்த இயக்கம். இந்த அரசாங்கம் அரசு ஊழியர்களின் உரிமைகளை சலுகைகளை புறந்தள்ளாத நிலையில் உரிய அறிவிப்புகள் வருமென்று அரசு ஊழியர்கள் இத்தனை காலமும் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள். காத்திருத்தலின் முற்றுப்புள்ளியாக சேலத்தில் நடக்கும் மாநில பிரதிநிதித்துவப் பேரவை இருக்கும், காத்திருத்தலில் இருந்து போராட்ட களத்திற்குள் நுழையும் ஜீரோ பாயிண்ட்டாக இந்த மாநில பிரதிநிதித்துவப் பேரவை இருக்கும் என்பதில் ஐயமில்லை. மாண்புமிகு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் தன்னுடைய வாயாலேயே தான் ஆட்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது அரசு ஊழியர்கள்தான் என்று ஒப்புரை வழங்கியதும், "உங்களுடைய கோரிக்கைகளை நான் மறக்கவும் இல்லை மறுக்கவுமில்லை. மறைக்கவுமில்லை," என்று தெரிவித்துள்ள நிலையில் நீண்ட காத்திருப்பில் அதை வைத்திருப்பது நியாயமானதில்லை. இன்றுவரை குறைந்தபட்சமாக அகவிலைப்படி, சரண்விடுப்பை பனாமாக்கிக் கொள்ளும் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றாமல் உள்ளது முதல்வரின் வார்த்தைகளின் மீதான நம்பகத்தன்மையை நொறுங்க வைத்துள்ளது. போராட்டகளம் அரசு ஊழியர்களுக்கு புதிதில்லை. களத்தில் சென்றுதான் உரிமைகளைப் பெற வேண்டும் என்றால் அதற்கும் அரசு ஊழியர்கள் தயாராகவே இருக்கிறார்கள். எங்களின் பொறுமையை இந்த அரசாங்கம் பலவீனமாக மதிப்பிட்டு விடக்கூடாது. அரசு ஊழியர்களை இழிவாக நினைத்தவர்களை. ஏளனமாக நடத்தியவர்களை, அடக்குமுறையால் மிரட்டியவர்களை அரசு ஊழியர்கள் என்ன செய்தார்கள் என்பதை வரலாறுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. மீண்டும் அத்தகையதொரு வரலாறு நிகழ்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முதல்வரின் பொறுப்பாகும்.

இந்த மாநில பிரதிநிதித்துவப் பேரவை அரசு ஊழியர்களின் உரிமைகளை மீட்பதற்கான இயக்கங்களை முன்னெடுக்கக்கூடிய போர்ப் பாசறையாக இருக்கும், அரசு ஊழியர்களின் வீறு கொண்ட போராட்டங்கள் புதிதாக பிறக்கும் 2023ஆம் ஆண்டை உரிமை மீட்புக்கான ஆண்டாகவும், சமூகநீதியை நிலை நாட்டும் ஆண்டாகவும் மாற்றிக்காட்டும். இந்த மாநில பிரதிநிதித்துவ பேரவையில் மேற்கொள்ளப்படும் ஆக்கபூர்வமான முடிவுகளும் அதையொட்டிய நடவடிக்கைகளும் இந்த அரசிடம் மனமாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும், ஆட்சியாளர்களின் நயவஞ்சக அரசியலையும். நச்சு பொருளாதார கொள்கைகளையும் உள்வாங்கிக் கொண்டு அதற்கொப்ப ஊழியர்களை ஒன்று நிரட்டி ஒன்றுபட்ட வலிமையை காண்பிக்கும் முன்னோட்டக் களமாக இந்த மாநில பிரதிநிதித்துவப் பேரவை இருக்கும்.

கட்டுரையாளர்: மு.அன்பரசு மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.