கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது ஏற்புடையதா? - கல்வியாளர், வக்கீல், ஆசிரியர்களின் கருத்துகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 16, 2022

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது ஏற்புடையதா? - கல்வியாளர், வக்கீல், ஆசிரியர்களின் கருத்துகள்

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கேட்பது சரியா?

கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது ஏற்புடையதா? என்பது குறித்து கல்வியாளர், வக்கீல், ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

மாநிலப் பட்டியலில் கல்வி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைக்கும் போது, கல்வியை மத்திய பட்டியலில், மாநில பட்டியலில் அல்லது பொது பட்டியலில் இவற்றில் எதில் சேர்ப்பது என்பது நீண்ட விவாதத்திற்கு பிறகே இறுதியில் கல்வி மாநில பட்டியலில் இருப்பதுதான் சரியானது என்று முடிவு செய்து, கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்த்தனர்.

இந்தியாவில் 1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை அமலில் இருந்த அவசர காலகட்டத்தில் (எமர்ஜென்சி) காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவியல், விலங்குகள், பறவைகள் பாதுகாப்பு ஆகிய 5 முக்கிய துறைகள் அரசமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம், மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. இது ஒத்திசைவுப் பட்டியல் என்று அழைக்கப்படுகிறது.

சர்தார் ஸ்வரண்சிங் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால் இந்த துறைகளின் அதிகாரங்களில் மாநில சட்டப்பேரவைகளுக்கு இருந்த முழு அதிகார வரம்பு, பொதுப் பட்டியலுக்கு மாறியது.

மீண்டும் கொண்டு வரவேண்டும்

மாநில அரசுகளின் எந்தவித முன் அனுமதியும் இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல், அவசர காலத்தில் இந்த சட்டம் இயற்றப்பட்டது என்று அப்போது முதல் தற்போது வரை விமர்சனத்துக்குள்ளாகிய வண்ணமே இருக்கின்றன.

கல்வித் துறையை பொதுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என்ற குரல் இதற்கு முன்பு முதல்-அமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி பல ஆண்டுகளாக வலுத்துக் கொண்டே இருந்தாலும், தற்போது வரை கல்வி பொதுப் பட்டியலிலேயே நீடித்து வருகிறது.

கல்வி மாநிலப் பட்டியலில் இல்லாமல், பொதுப் பட்டியலில் இருப்பதால் தான், நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக் கொள்கை போன்றவை மத்திய அரசு மூலம் அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தி.மு.க., அ.தி.மு.க. உள்பட சில கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் இந்த அம்சங்கள் முன்வைக்கப்பட்டன.

பிரதமரிடம் வலியுறுத்திய மு.க.ஸ்டாலின்

இதுதவிர, இதுதொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டிலும் இருக்கின்றன. நாடாளுமன்றத்திலும் இதுகுறித்த விவாதங்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், கடந்த 11.11.2022 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பான கோரிக்கையையும் வலியுறுத்தினார்.

அதில், 'அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த போது முதலில் கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அவசர காலத்தின் போது அது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அரசையும், குறிப்பாக பிரதமரையும் கேட்டுக்கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது பற்றி, கல்வியாளர், ஆசிரியர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர் அளித்த கருத்துகள் வருமாறு:-

திருக்குறள்

ராஜபாளையத்தை சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியர் கீதா:- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற பாரதியின் வாக்கிற்கு ஏற்ப எத்தனையோ மொழிகள் பல நாடுகளில் இருந்தாலும் நம் நாட்டு மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மக்களும் நம் தமிழ் மொழியின் இனிமை உணர்ந்து பல நூல்களை தமிழில் மொழி பெயர்க்கின்றனர். திருக்குறளை பிற நாட்டு பெண்கள் தமிழில் பாடவும் செய்கின்றனர். அந்தந்த மாநில சமூக பண்பாட்டை தழுவியதாக தான் கல்வி இருக்க வேண்டும். பன்முகத் தன்மை வாய்ந்த இந்தியாவில் மத்திய அரசு கல்வி சாத்தியமல்ல. இன்று அரசு தேர்வுகள் அனைத்தும் தமிழ் வழி சார்ந்து அமைகிறது. ஆனால் மத்திய அரசு பிற மொழிகளை இணைத்து செயல்படுத்துகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை ஆசிரியர் ராஜசேகர்:- இந்திய திருநாட்டில் பல்வேறு துறைகள் உள்ளன. இதில் கல்வித்துறை மிகவும் முக்கியமானது. சில துறைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். சில துறைகள் மாநில மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வியை மாநில பட்டியலில் கொண்டுவர வலியுறுத்தி உள்ளார். இந்த திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. மாநில பட்டியலில் கல்வியை கொண்டு வந்தால் கல்வி தரத்தை மற்ற மாநிலங்களுடன் போட்டி போடும் அளவிற்கு தரம் உயர்த்தப்பட வேண்டும்.

தலை சிறந்த மாநிலம்

காரியாபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவகுமார்:- காரியாபட்டி, நரிக்குடி பகுதி மிகவும் பின்தங்கிய பகுதி ஆகும். இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் கிராமங்களில் அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கல்வி மாநில பட்டியலுக்குள் வரும்போது, தமிழகம் இன்னும் தலை சிறந்த மாநிலமாக மாறும். எனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மத்திய அரசு மாற்றி தர வேண்டும்.

விருதுநகர் கல்வியாளர் டாக்டர் ஜெரால்டுஞானரத்தினம்:- கல்வி ஏற்கனவே மாநில பட்டியலில் இருந்த நிலையில் தற்போது மத்திய பட்டியலில் உள்ளது. மாநிலப்பட்டியலில் இருப்பது தான் மாநில மாணவர் நலனுக்கு உகந்தது. தேவைப்படும் அம்சங்களை மத்திய அரசு பரிந்துரை செய்ததை மாநில அரசு பட்டியலில் ஒருங்கிணைத்துக் கொண்டு மாநில அரசு அதற்கான கல்வி கொள்கையை உயர்த்த வேண்டும். இதன் மூலம் தமிழ் வழி கல்வி செம்மையுற வழிவகுக்கும். எனவே முதல்-அமைச்சர் வலியுறுத்தியபடி கல்வி மாநில பட்டியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.

டாக்டர் வைரமுத்து வேல்:-

மாநில பட்டியலில் இருந்த கல்வி மத்திய பட்டியலுக்கு இடம் மாறியது. இதனால் பல வகைகளில் தடம் மாறி உள்ளது. மத்தியப்பட்டியலில் கல்வி இருப்பதால் கல்வியின் தரம் உயர்வாக இருக்கும் என்ற கருத்தை தெரிவிக்கிறார்கள். இது ஏற்புடையதல்ல. மாநில பட்டியலுக்கு வந்தால் தான் இங்கு உள்ள சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை வகுக்க முடியும். எது எப்படி யாயினும் கல்வி மாநில பட்டியலில் இருப்பது தான் அனைத்து வகையிலும் தமிழக மாணவர்களுக்கு நன்மை பயக்கக்கூடியது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.