பஸ் நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்: வீடியோ வெளியாகி பரபரப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 28, 2022

பஸ் நிறுத்தத்தில் பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்: வீடியோ வெளியாகி பரபரப்பு

அரசு பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்

கோவை ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மாணவர்கள் இரு தரப்பினர் 2 நாட்களுக்கு முன் பயங்கரமாக மோதிக் கொண்டனர். ஒருவரையொருவர் விரட்டி விரட்டி தாக்கினர். மாணவர் ஒருவரை 5க்கும் மேற்பட்டவர்கள் சுற்றிவளைத்து அடித்து உதைப்பதை அந்தப் பகுதியில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ வெளியாகி பரபரப்பு

பள்ளி முன்பு மாணவர்கள் கூட்டமாக நின்று மோதி கொண்டிருப்பதை அந்த பகுதியில் இருந்த யாரும் தடுக்கவில்லை.‌ மாணவிகளிடம் பேசுவது, பஸ் ஸ்டாப்பில் நிற்பது தொடர்பாக மாணவர்களிடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. பொது இடங்களில் மாணவர்கள் கூட்டமாக நின்று தகராறு செய்வது தொடர்ந்துள்ளது. இதன் உச்சகட்டமாகத்தான் மாணவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதல் வீடியோ வெளியானதை தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் பள்ளிக்கு சென்று தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். முதன்மை கல்வி அலுவலர் கீதா உத்தரவின் பேரில், சர்க்கார் சாமக்குளம் வட்டார கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.

* கவுன்சிலிங் வழங்கப்படும்

முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ‘‘11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இவர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்கள்தான் வகுப்புகள் நடக்கவுள்ளது. பின்னர் தேர்வுகள் நடத்தப்படும். பள்ளி முடியும் நேரத்தில் மாணவர்கள் கேலி, கிண்டல் செய்து மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களை அழைத்து பேசி கவுன்சிலிங் வழங்கப்படும். அவர்களை நல்வழிப்படுத்த தேவையான முயற்சிகள் எடுக்கப்படும். போலீசார் மூலமாகவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.