பயிற்றுவிக்கும் பாடங்களின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, July 2, 2026

பயிற்றுவிக்கும் பாடங்களின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பயிற்றுவிக்கும் பாடங்களின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நடத்த வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர்கள் கோரிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு

பயிற்றுவிக்கும் பாடங்களின் அடிப்படையில் தகுதித்தேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் மனு

அடுத்த தகுதித் தேர்வின்போது பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வில், ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடத்துவது தொடர்பான கோரிக்கையை எதிர்காலத்தில் பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஜூலை 4 மற்றும் 5ஆம் தேதிகளில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பாணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த தேர்வில் இரண்டாவது தாளில் தமிழ், ஆங்கிலம், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் பாடங்களுக்கு தலா 30 மதிப்பெண்களும், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினுடைய ,மாநில பொருளாளர் திரு. *M.விஜயசாரதி*,மாநில மகளிரணி செயலாளர் *திருமதி. S.M கிருஷ்ணவேனி* ,மாவட்ட தலைவர் *திரு.கா. சாந்தகுமார்*, மற்றும் மாவட்ட துணை தலைவர் *திரு.ஜோசப் பெனடிக் ரவிராஜ்* உள்ளிட்டோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், குறிப்பிட்ட பாடத்தின் ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ள *தங்களுக்கு தொடர்பில்லாத கணிதம் , அறிவியல் மற்றும் சமுக அறிவியல் பாடங்களிலிருந்து 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்பதால்*, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, *ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும் பாடங்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் நிர்ணயித்து தேர்வு நடத்தும் வகையில் அறிவிப்பாணையை திருத்த உத்தரவிட வேண்டும்* என மனுவில் கோரியுள்ளனர். இந்த வழக்கு *நீதிபதி பி.டி.ஆஷா அவர்கள்* முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான *வழக்கறிஞர் மைத்ரேயி சந்துரு,* தமிழ் பாடத்தில் கல்வித் தகுதியை பெற்றவர்தான் தமிழை பயிற்றுவிக்கிறார்; ஆங்கில பாடத்தில் கல்வித் தகுதியை பெற்றவர்தான் ஆங்கில பாடம் நடத்துகிறார்; ஆனால் இவர்கள் தங்களுக்கு தொடர்பில்லாத கணிதம் மற்றும் அறிவியல் தேர்வு எழுத நிர்பந்திக்கப்படுகிறார்கள்; இது அவர்களுக்கு பாதாகத்தை ஏற்படுத்துவதாக வாதிட்டார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், கடைசி நேரத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதால், அடுத்த தேர்வில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து அதற்கு ஏற்றபடி அறிவிப்பாணையை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.