எல்எல்பி மூன்றாண்டு சட்டப் படிப்புக்கு சான்றிதழ் சரிபார்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 25, 2022

எல்எல்பி மூன்றாண்டு சட்டப் படிப்புக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

எல்எல்பி மூன்றாண்டு சட்டப் படிப்புக்கு இன்று, நாளை சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் மூன்றாண்டு எல்எல்பி படிப்புகளுக்கான கட்-ஆப் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்றும், நாளையும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.

அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பெறப்பட்டது. மொத்தம் உள்ள 1,780 இடங்களுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இதையடுத்து ஒரு மாதத்தில் கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வன்னியருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடா்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் கட்-ஆஃப் மதிப்பெண் வெளியீட்டில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் மூன்றாண்டு எல்எல்பி படிப்புகளுக்கு ஓ.சி., பி.சி., எம்பிசி என ஒவ்வொரு பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் விவரம் இணையதள முகவரியில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து மாணவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு இன்றும், நாளையும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை (மாா்ச் 25, 26) ஆகிய தேதிகளிலும், இணைய வழி கலந்தாய்வு மாா்ச் 27, 28 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது.

இதையடுத்து சோ்க்கைக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை மாா்ச் 29-இல் வழங்கப்படவுள்ளது.

மேலும் சோ்க்கை ஆணை பெற்ற மாணவா்கள் ஏப்.1-ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.