19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னாச்சு - 'டெட்' தேர்ச்சி ஆசிரியர்கள் அரசுக்கு கேள்வி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 29, 2025

19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னாச்சு - 'டெட்' தேர்ச்சி ஆசிரியர்கள் அரசுக்கு கேள்வி

19 ஆயிரம் ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு என்னாச்சு - 'டெட்' தேர்ச்சி ஆசிரியர்கள் அரசுக்கு கேள்வி - What happened to the announcement regarding the appointment of 19,000 teachers? - Teachers who passed the 'TET' exam question the government.

கல்வித்துறையில் 2026 ஜனவரிக்குள் 19 ஆயிரத்து 260 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்' என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தது என்னாச்சு. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால் பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதற்கு யார் பொறுப்பு,' என ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற நியமன தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டும், இரு கண்கள் எனக் கூறிவருகிறார். 2021 சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை இவ்விரண்டு துறைகளில் தான் அதிகம் நிறைவேற்றவில்லை. இதற்கு உதாரணம் தான் தற்போது செவிலியரும், ஆசிரியரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது. 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிம்மதியடைந்தனர். அதற்கேற்ப '2025 ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்' என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். ஆனால் பெயரளவில் காலிப்பணியிடங்களை நிரப்பிவிட்டு, பலரின் வாழ்க்கையை தி.மு.க., அரசு கேள்விக்குறியாக்கி விட்டது.

நிறைவேற்றும் எண்ணமில்லை

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் நியமனத் தேர்வர்கள் முதன்மை நிர்வாகி சவுமியா சுரேஷ் கூறியதாவது:

மக்களுக்கும், ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கும் வாக்குறுதிகளை வாரி இறைத்தபின், அதை நிறைவேற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. அதிகாரிகள் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது. 2025 ல் டி.என்.பி.எஸ்.சி., மூலம் 17 ஆயிரத்து 595, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19 ஆயிரத்து 260 ஆசிரியர் என 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் கூறினார். எத்தனை பணியிடம் நிரப்பப்பட்டது என அந்தந்த துறைச் செயலாளர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா.

கல்வித்துறையில் காலியாக உள்ள 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களில் 4 ஆயிரம் நிரப்பப்பட்டுள்ளன. பல ஆயிரம் பணியிடங்கள் 'அவுட் சோர்ஸ்' மூலம் நிரப்பப்பட்டுள்ளன. இதன்மூலம் தனியார் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் பலனடைந்து வருகின்றனர். இங்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு, கல்வித் திட்டம் ஒன்றில் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏன் அந்த திட்டத்தில் பணியாற்ற தற்போது பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்.,களுக்கு தகுதி இல்லையா. அவுட்சோர்ஸ் மூலம் அரசு வேலைக்கு காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்கள் வறுமையில் வாடுகின்றனர். இதுதான் சமூக நீதியா. இந்த அரசில் நிதியும் இல்லை, நீதியும் இல்லை. பாதிக்கப்பட்டவர்களை ஏனென்று கேட்க நாதியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.