சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை ₹1000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 7, 2025

சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை ₹1000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!



Government Order issued increasing the additional liability allowance for nutritional meal organizers to ₹1000/-!

சத்துணவு அமைப்பாளர்களுக்கான கூடுதல் பொறுப்புப் படியை ₹1000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!

சுருக்கம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்புப்படியினை உயர்த்தி வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண்.98 1 நாள் 30.12.2024

திருவள்ளுவர் ஆண்டு 2055 குரோதி மார்கழி 15 படிக்க: 1. அரசாணை (நிலை) எண்.39, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந4.2) துறை, நாள் 30.04.2015. மீண்டும் படிக்க:-

2. சமூக நல ஆணையர் அவர்களின் கடித ந.க.எண்.32512/சஉதி1(3)/2023, நாள் 28.12.2023 மற்றும் 01.02.2024.

ஆணை :-

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப்படியினை, சிறப்பு நிகழ்வாக, கூடுதல் பொறுப்பு வகிக்கும் மையம் ஒன்றுக்கு ரூ.10-லிருந்து நாளொன்றுக்கு ரூ.20 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், சத்துணவு மையங்களின் செயல்பாட்டில் எவ்வித தடங்கலும் ஏற்படாவண்ணம் போதிய பணியாளர்களை கூடுதல் பொறுப்பு வகிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கள அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு சமுக நல ஆணையருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், சமூக நல ஆணையர், தற்போது ஏற்பட்டுள்ள அதிக காலிப்பணியிடங்கள் காரணமாக, ஒரு சத்துணவு அமைப்பாளர், ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மையங்களை கூடுதலாக கவனித்து வருவதாலும், உயர்ந்து, வரும் விலைவாசி காரணமாகவும், சத்துணவுப் பணியாளர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.20/- வீதம், மாதத்திற்கு ரூ.600/- ஆக வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப்படியினை, ஒரு நாளுக்கு ரூ.33/- வீதம் ரூ.1000/-ஆக உயர்த்தி கூடுதல் பொறுப்புப்படியினை நிர்ணயம் செய்து ஆணை வெளியிடுமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். 3. சமூக நல ஆணையரின் கருத்துரு அரசளவில் கவனமுடன் பரிசீலனை செய்யப்பட்டது. அதனடிப்படையில், பின்வருமாறு ஆணைகள் வெளியிடலாம் என முடிவு செய்து, அவ்வாறே அரசு ஆணையிடுகிறது:-

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.20/- வீதம். மாதத்திற்கு ரூ.600/- ஆக வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப் படியினை. ஒரு நாளுக்கு ரூ.33/- வீதம் ரூ.1000/-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.

ஒரு சத்துணவு அமைப்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மையங்களை கூடுதலாக கவனித்து வந்தாலும், ஒரு மையத்திற்கு உண்டான கூடுதல் பொறுப்புப்படி மட்டுமே வழங்கப்படும். ஒரு வாரத்திற்கு மேல் கூடுதல் பணிபுரிந்தால் மட்டும் கூடுதல் பொறுப்புப்படி வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து, பொறுப்பேற்ற நாளிலிருந்து முடியும் நாள் வரை உள்ள காலத்திற்கு தற்செயல் விடுப்பு நாட்களைத் தவிர, ஏனைய கூடுதல் பொறுப்பேற்ற நாட்களுக்கு (விடுமுறை நாட்கள் உட்பட) பொறுப்புப்படி வழங்கப்படும்.

ஒரு வாரத்திற்குமேல் பணிபுரிந்து இருந்தால் (ஒரு மாதம் முழுவதும் பணிபுரியாமல்), பணியாற்றிய நாளுக்கு (1000-30 = 33.33 (Round off Rs.33/-) ரூ.33/- வீதம் கணக்கிட்டு வழங்கப்படும். ஒரு மாதம் முழுவதுமாக கூடுதல் பணிபுரிந்து இருந்தால், கூடுதல் பொறுப்புப்படியாக ரூ.1,000/- வழங்கப்படும்.

உயர்த்தப்படும் கூடுதல் பொறுப்புப்படி, இவ்வாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்கீழ், பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் பொறுப்புப்படியினை, ரூ.1000/- உயர்த்தி வழங்குவதால் ஆண்டிற்கு தோராயமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.6,68.11.200/-(ரூபாய் ஆறு கோடியே அறுபத்தெட்டு இலட்சத்து பதினோராயிரத்து இருநூறு மட்டும்) ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.

4. மேலே பத்தி 3-இல் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள தொகை பின்வரும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்படவேண்டும். (D No.45-03) - "2236-சத்துணவு 02 - சத்துணவு மற்றும் பானங்கள் வழங்குதல் 102 - மதிய உணவு மாநிலச் செலவினங்கள் KL 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - 301 சம்பளங்கள் -01 அடிப்படை சம்பளம்" (IFHRMS DPC 2236 02 102 KL 30101)

5. மேலே பத்தி 3-ல் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள தொகைக்கு தேவையான கூடுதல் நிதியொதுக்கம் ரூ.1,67,02,800/- 2024-2025-ஆம் ஆண்டிற்கான திருத்திய மதிப்பீடு/இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். எனினும் 2024-2025- ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையில் ஒரு குறிப்பிட்ட தொகையினை சேர்ப்பதன் மூலம் இச்செலவினம் சட்டப் பேரவையின் பார்வைக்கு கொண்டு செல்லப்படவேண்டும். அவ்வாறு நிதியொதுக்கம் செய்ய இருப்பதை எதிர்நோக்கி, மேலே பத்தி-3-இல் அனுமதிக்கப்பட்ட தொகையினை பெற்று வழங்கிட சமூக நலத்துறை ஆணையர் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சேர்ப்பதற்கு உரிய வரைவு விளக்கக் குறிப்பினையும் மற்றும் திருத்திய மதிப்பீடு/இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் சேர்ப்பதற்கு உரிய கருத்துருவையும் தவறாது நிதி (சந)/வ.செ.பொ-1) துறைக்கு உரிய நேரத்தில் அனுப்பி வைக்குமாறு சமூக நல ஆணையர் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

6. இவ்வாணை, நிதித்துறையின் அ.சா. எண்.6455443/நிதி (சந)/2024, நாள் 20.12.2024-ல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. இதற்கான கூடுதல் நிதியொதுக்கப் பேரேட்டு எண் 1771 (ஆயிரத்து எழுநுற்று எழுபத்து ஒன்று) IFHRMS ASL No.2024121771)

(ஆளுநரின் ஆணைப்படி)

CLICK HERE TO DOWNLOAD G.O.Ms. No 98 Noon Meal Organiser Addl Charge Allowance Hike PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.