அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -06. ந.க.எண்.48834/டி1/இ4/2023. நாள். 09.02.2024 பொருள்: பள்ளிக் கல்வி - அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள் -
2023-24ஆம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் - தொடர் நடவடிக்கைகள் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு.
பார்வை: (i).சென்னை-600006, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.48834/டி1/இ4/2023. நாள். 09.11.2023
2023-24ஆம் கல்வியாண்டில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளுக்கான பணியாளர் நிர்ணயம், தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், உபரியாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தொடர்ந்து அதே பள்ளியில் பணிபுரிய அனுமதிக்கப்படும் சூழலில் அரசுக்கு ஏற்படும் நிதியிழப்பினை தவிர்த்திடும் பொருட்டும், அரசுத் தணிக்கையில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யாத காரணத்தினால் அரசுக்கு ஏற்படும் நிதியிழப்பினை சுட்டிக்காட்டி பல்வேறு தணிக்கைத் தடைகள் எழுப்பப்பட்டுள்ளமையை. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் இப்பொருள் சார்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியமை ஆகியவற்றை கருத்திற்கொண்டு 2023-24ஆம் கல்வியாண்டில் அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது சார்ந்து பார்வை (i)ல் கண்டுள்ள செயல்முறைகளின்படி அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் (EMS) நிரப்பத் தகுந்த காலிப் பணியிடங்கள் மற்றும் பணிநிரவல் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கூட்டு மேலாண்மை நிறுவனங்களின் கீழ் செயல்படும் அரசு நிதிஉதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்களும் முதன்மைக் கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விவரங்களின் அடிப்படைடியில் கூட்டு மேலாண்மைப் பள்ளிகளின் நிர்வாகங்களின் கீழ் செயல்படும் ஏதேனும் உயர்/மேல்நிலைப் பள்ளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பட்டியலில் விடுபடவில்லை என்பதனை உறுதிபடுத்திட தெரிவிக்கப்பட்டது. மேலும், எதிர்வரும் காலங்களில் இப்பட்டியலின் அடிப்படையிலேயே கூட்டு மேலாண்மைப் பள்ளிகள் கருத்திற் கொள்ளப்படும் என்பதனை தொடர்புடைய நிர்வாகங்களுக்குத் தெரிவித்து இப்பட்டியலை இறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கூட்டு மேலாண்மை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டுவரும் பள்ளிகளின் நிர்வாகத்தினர் தங்கள் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள நிதிஉதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் அரசு மானியம் பெற்று உபரியாக பணியாற்றிவரும் ஆசிரியர்களை, தங்களது நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிற பள்ளிகளில் 2023-24ஆம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி, நிரப்பத் தகுந்த காலிப்பணியிடங்களில் பணி நிரவல் ஆணை வழங்கிடுமாறும். அவ்வாறு ஆணைகள் வழங்கப்படும் நேர்வில் இப்பணி நிரவல் ஆணைகளை விதிகளின்படி பரிசீலனை செய்து தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணிவிடுவிப்பு/பணியேற்பிற்கு ஒப்புதல் வழங்கி அதன் விவரங்களை EMISல் பதிவேற்றம் செய்திட பார்வை (1)ல் கண்டுள்ள செயல்முறைகளின்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விவரங்களை பரிசீலனை செய்ததில் கூட்டு மேலாண்மை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை அதே நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பிற பள்ளிகளில் நிரப்பத் தகுந்த காலிப்பணியிடம் இருந்தும் பணிநிரவல் செய்யப்படவில்லை என அறிய முடிகிறது. உரிய விவரங்கள் இணைப்பு (1)ல் கண்டுள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் கண்டுள்ள விவரங்களை தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சார்ந்த அலுவலக ஆவணங்களை ஒப்பிட்டு, சரிபார்த்து அதனடிப்படையில் தொடர்புடைய நிர்வாகங்களுக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவித்து எதிர்வரும் 14.02.2024க்குள் பணிநிரவல் ஆணை வழங்கிட தெரிவித்திடவும். அவ்வாறு கூட்டு மேலாண்மை நிர்வாகங்கள் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்திட தவறும் நிலையில், தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம். 1973 மற்றும் தமிழ்நாடு சிறுபான்மைப் பள்ளிகள் அங்கீகரித்தல் மற்றும் மான்யம் வழங்குதல் விதிகள் 1977ன் விதி (6)ன் அடிப்படையில் மாவட்டத்திற்குள் தொடர்புடைய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத்திற்கிடையே பள்ளிக் கல்வி இயக்குநரால் பணிநிரவல் செய்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரத்தினை தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. சிறுபான்மைப் பள்ளிகளில், 2023-24ஆம் கல்வியாண்டு பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி, அரசு மானியம் வழங்கப்பட்டு வரும் நிரப்பத் தகுந்த காலிப்பணியிடங்களுக்கு. அதே வ்கையினைச் சார்ந்த பிற சிறுபான்மைப் பள்ளிகளில் தற்போது உபரியாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் ஈர்த்துக் கொள்வது சார்ந்து தொடர்புடைய பள்ளி நிர்வாகங்களுடன் கலந்தாலோசனை செய்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறுபான்மைப் பள்ளி நிர்வாகம், மேற்கண்டுள்ளவாறு தங்கள் பள்ளியில் உள்ள அரசு மானியம் பெறும் நிரப்பத் தகுந்த காலிப்பணியிடங்களுக்கு பிற பள்ளிகளிலிருந்து உபரி ஆசிரியர்களை ஈர்த்துக் கொள்ள இசைவு தெரிவிக்கும் நேர்வுகளில், உடனடியாக பணிநிரவல் ஆணை வழங்கிடவும் அவ்விவரங்களை 16.02.2024க்குள் EMISல் பதிவேற்றம் செய்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்டுள்ளவாறு. கூட்டு மேலாண்மை நிர்வாகத்திற்குள் பணிநிரவல் நடவடிக்கை மற்றும் சிறுபான்மைப் பள்ளி நிர்வாகத்தின் இசைவின் அடிப்படையிலான சிறுபான்மை நிர்வாகப் பள்ளிகளுக்குள் பணிநிரவல் நடவடிக்கைகள் நிறைவு செய்து பின்னர் எஞ்சியுள்ள உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யும் நடவடிக்கையானது கல்வி மேலாண்மை தகவல் முறைமை வழியே (EMIS) இணையவழி கலந்தாய்வின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது 2023-24ஆம் கல்வியாண்டு நிறைவடையும் நிலையில் உள்ளதால், பணிநிரவல் செய்யப்படும் உபரி ஆசிரியர்களை இக்கல்வியாண்டின் இறுதி வேலை நாளில், பணிநிரவல் செய்யப்பட்டுள்ள புதிய பள்ளியில் பணியேற்கும் வகையில் பணிவிடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.