February 15 symbolic one-day strike to emphasize 10-point demand - 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 15 அடையாள ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம். அனைவரும் பங்கேற்க அழைக்கிறேன்..
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும். பட்டதாரி மற்றும் தலைமையாசிரியர் பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். அரசாணை 243ஐஇரத்து செய்திட வேண்டும் இவைகள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பான சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் குழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை, அதே தேதியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக மேற்கொள்ள வேண்டும் என என முன்மொழியப்பட்டது. இதனை அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்களும் ஏற்றுக் கொண்டனர். இதன் அடிப்படையில் பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் நடைபெற இருந்த உண்ணாவிரதம் அதே தேதியில் அடையாள வேலை நிறுத்த போராட்டமாக நடைபெறும். இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னிட்டு பிப்ரவரி 9ஆம் தேதி மாவட்டத் தலைநகரில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறும். பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் அரசு அலுவலர்களையும் ஆசிரியர்களையும் நேரடியாக சந்தித்து துண்டறிக்கைகள் வழங்கி போராட்டத்தை வெற்றிகரமாக்கும் பிரச்சாரம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் நாளில் வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார, மாவட்ட, மாநில நிர்வாகிகள் திட்டமிட்டபடி செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களின் குரல் ஒருங்கிணைந்து, ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டத்தின் அவசியத்தையும் தீவிரத்தையும் உணர்ந்து கூட்டணியின் வீரர்கள், வீராங்கனைகள் முழுமையாக பங்கேற்று கோரிக்கைகள் வென்றெடுக்க உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றென்றும் உங்களுடன்...
ந.ரெங்கராஜன்
பொதுச்செயலாளர், TESTF
இணைப் பொதுச்செயலாளர், AIPTF பொதுச்செயலாளர், WTTC
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.