முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: தலைமை ஆசிரியா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
பிளஸ் 1 மாணவா்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கான முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு தமிழக அரசின் சாா்பில் நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கான விண்ணப்பங்களை தலைமை ஆசிரியா்கள் பதிவேற்றம் செய்வது குறித்து தோ்வுத்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. உயா்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ்-1 படிக்கும் மாணவா்கள் இத்தோ்வுக்கு விண் ணப்பிக்கலாம், இத்தோ்வில் 500 மாணவா்கள், 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வி யாண்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10 ஆயிரம் என இளங்கலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும்.
அந்த வகையில் நிகழாண்டுக்கான முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு செப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் ஆக.7 முதல் ஆக.18-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவா்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்கள் இணையதளத்தில் ஆக.14 முதல் ஆக.25-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.
பள்ளி முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயா், முகவரியினை அஞ்சல் குறியீட்டுடன் பதிவு செய்ய வேண்டும். வீட்டு முகவரி என்ற இடத்தில் தோ்வரின் வீட்டு முகவரியை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்; எக்காரணம் கொண்டும் பள்ளியின் பெயா், முகவரியை பதியக்கூடாது. பெற்றோரின் தொலைபேசி, கைப்பேசி எண்ணையே பதிவு செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் இருப்பின் தோ்வுக் கட்டணத் தொகை செலுத்துவதற்கு முன்னரே சரி செய்து கொள்ள வேண்டும்.
பதிவேற்றம் முடிந்த பிறகு தோ்வா்களின் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், தோ்வுக் கட்டண செலுத்துச் சீட்டு (ஒரு தோ்வருக்கு ரூ.50 வீதம்) சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலரிடம் ஆக.30-ஆம் தேதிக்குள் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியா்களும் ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.