300 CBSE பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி துறை 'நோட்டீஸ்!'... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 16, 2023

300 CBSE பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி துறை 'நோட்டீஸ்!'...



300 CBSE பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி துறை 'நோட்டீஸ்!'...

பள்ளிக்கல்வித் துறையின் அங்கீகாரம் காலாவதியான, 300 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 60 ஆயிரம் பள்ளிகளில், 13 ஆயிரம் பள்ளிகள் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளாக செயல்படுகின்றன. மேலும், 1,500 பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படுகின்றன. இந்த பள்ளிகள், தமிழக பள்ளிக்கல்வித் துறையில் இருந்து, என்.ஓ.சி., என்ற தடையில்லா சான்றிதழ் பெற்று, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைந்துஉள்ளன.

உத்தரவு

சி.பி.எஸ்.இ., மற்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் விதிகளின்படி, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைந்த பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரத்தை பெறுவது மட்டுமின்றி, தமிழக பள்ளிக்கல்வி துறையில், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். பெரும்பாலான பள்ளிகள் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து, தமிழக தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் உத்தரவின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியாக, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் நுாற்றுக்கணக்கான பள்ளிகள், தமிழக அரசின் அங்கீகாரத்தை நீட்டிக்காமல் செயல்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்பி, விளக்கம் கேட்க, உத்தரவிடப்பட்டது.

நடவடிக்கை

இதன்படி, முதல் கட்டமாக, 300 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறையில் அங்கீகாரத்தை புதுப்பிக்காதது குறித்து விளக்கம் கேட்டு, முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த பள்ளிகள், தங்களின் அங்கீகாரத்தை உடனே நீட்டிப்பு செய்ய வேண்டும்; தவறினால் உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.