மாபெரும் தமிழ்க் கணவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை தொடக்கம் - செய்தி வெளியீடு - நாள் : 03.02.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 3, 2023

மாபெரும் தமிழ்க் கணவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை தொடக்கம் - செய்தி வெளியீடு - நாள் : 03.02.2023

செய்தி வெளியீடு எண்: 227 நாள் : 03.02.2023

மாபெரும் தமிழ்க் கணவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை தொடக்கம்

கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ்க் கனவு' என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று (03.02.2023), முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று நகரங்களில் நடத்தப்பட்டன. பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறையுடன் இணைந்து தமிழ் இணையக் கல்விக்கழகம். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியது.

நமது தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையையும் சமூகச் சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ் மரபும் - நாகரிகமும், சமூக நீதி. பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு. தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான வாய்ப்புகள் மற்றும் முன்னெடுப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 100 கல்லூரிகளில் மாபெரும் தமிழ்க் கனவு பரப்புரைத் திட்டம்' நிகழ்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வு நடக்கும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பங்கு பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைந்தபட்சம் 1 லட்சம் மாணவர்களைச் சென்றடைவதே திட்டத்தின் இலக்காகும். பல்வேறு தளங்களில் சிறந்து விளக்கும் தமிழ்நாட்டின் 50-க்கும் மேற்பட்ட ஆளுமைகளைக் கொண்டு. 200 சொற்பொழிவுகளை வகுக்கப்பட்டுள்ளது. 60 நாட்களில் நடத்திமுடிக்க செயல்திட்டம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இரண்டு பேச்சாளர்கள் தமிழ்ப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையிலும், அதேநேரம் அவர்கள் புலமை பெற்ற துறை சார்ந்தும் பேருரை நிகழ்த்துவார்கள். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஆளுமைகள் மற்றும் பல்துறை நிபுணர்கள் ஆகியோரின் ஊக்கமிகு உரை மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர்களுக்குத் தமிழ் மரபின் பெருமிதத்தை உணர்த்துவதாகவும் அமையும்.

மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக் காட்சி, நான் முதல்வன், வேலைவாய்ப்பு8 பயிற்சி, மாவட்ட தொழில் மையம். வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் நிகழ்வு நடைபெறும் கல்லூரிகளில் அமைக்கப்படும்.

இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டிமற்றும் 'தமிழ்ப் பெருமிதம்' ஆகிய இரு கையேடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்.

'உயர்கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டி', மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து எந்தத் திசையில் பயணிக்கலாம் என்பதற்கு வழிகாட்டுவதாக அமையும், உயர்படிப்புக்கான வாய்ப்புகள், வங்கிக் கடன் உதவி, போட்டித் தேர்வுகளை அணுகுவது எப்படி போன்ற அனைத்து வினாக்களுக்கும் விடை அளிப்பதாக இந்த வழிகாட்டி இருக்கும்.

தமிழ்ப் பெருமிதங்களைப் பறைசாற்றும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெருமிதம்' என்ற கையேடு உரிய தரவுகள் மற்றும் சான்றுகளுடன் வடிவமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பழம்பெருமைகளும், கால ஓட்டத்தில் ஏற்ப்பட்ட மாற்றங்களும் தற்போது தமிழ்ச் சமூகம் பெற்றிருக்கும் ஏற்றங்களும் ரத்தினச் சுருக்கமாக வண்ணப்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு நூல்களும் நிச்சயம் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பரப்புரையின் தொடக்கமாக முதற்கட்ட நிகழ்ச்சிகள் கோயம்புத்தூர், சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் 03.02.2023 அன்று நடைபெற்றது. கோயம்புத்தூர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'தமிழர் மரபின் தொன்மை' பற்றி மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு, அவர்களும் , "தமிழர் உணவு - நோய் நீக்க நலம் காக்க" என்ற தலைப்பில் மருத்துவர் கு. சிவராமன், அவர்களும் சொற்பொழிவாற்றினர். திட்டத்தின் நோக்கம் குறித்து கோயம்புத்தூர் மாநகர ஆணையர் திரு.எம்.பிரதாப்.இ.ஆ.ப., அவர்கள் விளக்கினார்.

மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 'சரித்திரத் தேர்ச்சி கொள்' என்ற தலைப்பில் மரியாதைக்குரிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சு. வெங்கடேசன், அவர்களும் 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்' என்ற தலைப்பில் எழுத்தாளரும் இயக்குநருமான திரு பாரதி கிருஷ்ணகுமார் அவர்களும் உரை நிகழ்த்தினர். திட்டத்தின் நோக்கம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ்சேகர்.இ.ஆ.ப., அவர்கள் விளக்கினார்,

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'முதல் தலைமுறை சினிமா' என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநர் திரு வெற்றி மாறன், மாணவர்களுடன் உரையாற்றினர். திட்டத்தின் நோக்கம் குறித்து தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் விளக்கினார்.

மேற்கண்ட மூன்று நிகழ்வுகளில் 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அரசால் நடத்தப்படவுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.