நாடு முழுக்க.. கல்லூரி மாணவிகள், பேராசிரியைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி.. யுஜிசி அதிரடி உத்தரவு - All over the country.. For college students, professors.. UGC action order
மாணவிகள் மற்றும் பேராசிரியைகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தும் அமைப்பான யுஜிஜி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதால் அனைத்து கல்லூரிகளிலும் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவுறுத்தலை யுஜிசி பிறப்பித்துள்ளது பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் ஆண்களை எப்படி தாக்குவது, கடத்த முயற்சிப்பவர்களை எவ்வாறு தாக்கி தப்பிப்பது போன்ற அடிப்படை தற்காப்புப் பயற்சிகள் மாணவிகளுக்கும், பேராசிரியைகளுக்கும் வழங்கப்படவுள்ளன.
அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்
நாட்டில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தென் மாநிலங்களை ஒப்பிடும் போது வட மாநிலங்களில் இந்தக் குற்றச் சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன. பெண்களை பலாத்காரம் செய்வது, கொலை செய்வது, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு போன்ற சம்பவங்கள் வட மாநிலங்களில் அன்றாடம் நடக்கக்கூடிய நிகழ்வுகளாக மாறிவிட்டன. இதனால் பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கு கூட பயப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தற்காப்புக் கலை பயிற்சி
இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதனைத் தொடர்ந்து, இதுபோன்ற குற்றங்களை குறைக்க என்ன நடவடிக்கைகளை எடுப்பது என யுஜிஜி உயரதிகாரிகள் கடந்த சில வாரங்களாக தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர். அப்போது, மாணவிகளுக்கும், பேராசிரியைகளுக்கும் தற்காப்புக் கலை பயிற்சி அளிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது
என்னென்ன வழிகாட்டுதல்கள்?
மேலும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உயர்கல்வி நிறுவனங்கள் (கல்லூரி, பல்கலைக்கழகங்கள்) சார்பில் மாணவிகள் மற்றும் பேராசிரியைகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி அளிக்க வேண்டும். கல்லூரிகளில் மாணவிகள் சேரும் போதே, அவசரக் காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் அடங்கிய கையேடு வழங்கப்பட வேண்டும். உதவி எண்கள்
அதில், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த விரிவான தகவல்கள் இருக்க வேண்டும். அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் சரியான நடத்தைகளை பட்டியலிட வேண்டும். மாணவிகளின் ஆலோசகர், ராகிங் புகார் பிரிவு, மருத்துவ அவசர உதவி, சுகாதார மையம், உணவகம் மற்றும் தேவைப்பட்டால் மற்ற பல்கலைக்கழக அதிகாரிகளை அணுகுவதற்கான உதவி எண்கள் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். போதுமான எண்ணிக்கையிலான பெண் பாதுகாவலர்களை பணியமர்த்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.