தலை நிமிருமா தமிழகக் கல்வித் தரம்?: சிந்தனை களம் - முனைவர் ரா.காயத்ரி - கல்வியாளர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, January 29, 2023

தலை நிமிருமா தமிழகக் கல்வித் தரம்?: சிந்தனை களம் - முனைவர் ரா.காயத்ரி - கல்வியாளர்

தலை நிமிருமா தமிழகக் கல்வித் தரம்?: சிந்தனை களம்

தமிழகத்தில் பெரும்பான்மை அம்மாக்கள் ரேஷன் கடையில், அப்பாக்கள் மதுக்கடையில், பிள்ளைகள் 30 அடி உயரக் 'கட் -- அவுட்' டில் சினிமா தலைவனுக்கு மாலை போட என்றாகி விட்டது.

இப்படிப்பட்ட சூழலில், 'ஏசர்' என்ற 2022ம் ஆண்டு நிலை கல்வி அறிக்கையில் மொழிப் பாடம் வாசிப்பில், அடிப்படை கணிதத்தில், தமிழகம் தேசிய அளவை விட குறைந்துள்ளது.

வளர்ச்சியில் உத்தரப்பிரதேசம், பீகாரை விட தமிழகம் பின்தங்கிஉள்ளது என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைவதற்கோ, ஆச்சரியப்படுவதற்கோ ஒன்றும் இல்லை. அபாய எச்சரிக்கை

கல்வியாளர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு பெற்றோரும் எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம் இது.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு, மாணவர்கள் சேர்க்கையில் நம்பர் 1, எல்லாவற்றிலும் நம்பர் 1 என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசு, இந்த அறிக்கையின்படி, 2018ம் ஆண்டை விட 3, 5, 8ம் வகுப்புகளில் மொழிப் பாட வாசிப்பில், அடிப்படை கணித அறிவியல் அறிவில் மிகவும் பின்தங்கியுள்ளது என்ற உண்மை வெளியே வந்திருக்கும்போது, அது ஒரு அபாய எச்சரிக்கையைத்தான் நமக்குத் தருகிறது.

'பிரதம்' என்ற அரசு சாரா நிறுவனம், 1996ல் இருந்து கிராமப்புற ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பல விஷயங்களை முன்னெடுக்கிறது.

கடந்த 2004ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தபோது, கல்வியில் இந்திய கிராமப் புற மாணவர்களின் நிலை என்ன என்ற உண்மை தன்மையை தெரிந்து கொள்ள, இந்த அமைப்பின் வாயிலாக கிராமப் புறங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் வாயிலாக பல முடிவுகளை எடுக்கவும் முயன்றது.

இந்த அமைப்பு, 2018ம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, தமிழக மாணவர்கள் குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்கள் கற்றல், புரிதலில் மிகப் பெரிய அளவிலான பின்னடைவில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், அப்போது இதை யாரும் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கடந்த 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும், கல்வியில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது.

ஆனால், கெட்டதிலும் ஒரு நல்லது நடந்தது. இந்தியா முழுவதும் தனியார் பள்ளியிலிருந்து, பிள்ளைகள் அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் சேர்ந்தனர். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. ஆய்வு கணக்கெடுப்பு

இந்தியாவில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளதுபோல, தமிழகத்திலும் அதிகரித்தது.

கடந்த, 2022ம் ஆண்டிற்கான அறிக்கைக்காக, இந்தியா முழுவதும் ஏழு லட்சம் பிள்ளைகளிடம் 19,060 பள்ளிகளில், 616 மாவட்டங்களில், கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு 30 கிராமங்களில் கணக்கெடுப்பு நடந்தது. ஒரு கிராமத்துக்கு 20 பிள்ளைகள் என தேர்வு செய்து, ஆய்வு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த கணக்கெடுப்பு, 591 கூட்டு நிறுவனங்கள், 920 தலைமை பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல்களுடன், 27,536 தன்னார்வலர்களைக் கொண்டு நடத்தப்பட்டுள்ளது

இந்த ஆய்வுகள் மற்றும் கணக்கெடுப்பில் கிடைத்த விபரங்களின் படி, அரசு பள்ளிகளில் பிள்ளைகள் சேர்க்கை 65.6லிருந்து 72.9 சதவிதமாக உயர்ந்து உள்ளது. 2018ல் வெளியான அறிக்கையிலும் தமிழகத்தின் நிலை இதுதான். தேசிய சாதனை ஆய்வு அறிக்கையும் அதைத்தான் கூறியது.

அதுவும் தமிழகத்தில் 1.25 லட்சம் பிள்ளை களுக்கு மேல் 22 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி, இந்த தகவலை வெளிப்படுத்தியது.

இந்த ஆய்வறிக்கையின் படி, மூன்றாம் வகுப்பிற்கான மொழி எண் ஆய்வில் 11.6 என்ற புள்ளியிலிருந்து 4.7 புள்ளி என்ற நிலையை அடைந்துள்ளனர்.

இது காஷ்மீர், அருணாச்சல பிரதேசத்திற்கு இணையானது. ஆனால், உத்தரபிரதேசம் 12.6 லிருந்து 16.4 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பீகார் 12.3லிருந்து 12.9 என்ற இலக்கை எட்டியுள்ளது.

வளர்ச்சியில் பின்னடைவு

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நிலை - 46.3லிருந்து 26.0 என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்த, 2018ல் நம்மை விட பின்தங்கிய உத்தரப்பிரதேசமும் பீகாரும், 36.2 லிருந்து 38.3 எனவும். 35லிருந்து 37 எனவும் வளர்ச்சி அடைந்துள்ளன.

வளர்ச்சியின் அளவு குறைவாக இருந்தாலும், அங்கெல்லாம் தொடர் வளர்ச்சியை காண முடிகிறது. நம் அண்டை மாநிலமான ஆந்திரா நம்மை விட முன்னணியில் உள்ளது.

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் திறன் எப்படி உள்ளது என்றால், அடிப்படைக் கழித்தல் மற்றும் வகுத்தலில் 27ல் இருந்து 14.7 என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எட்டாம் வகுப்பில், மொழி பிரிவில் 75லிருந்து 62.8 என்ற நிலைக்கு சரிந்துள்ளோம். அது மட்டு மல்ல, கணிதத்திலும் 49.6 லிருந்து 43.5 என சரிவைக் கண்டுள்ளோம்.

எட்டாம் வகுப்பிலும் நாம் உத்தரபிரதேசம் பீஹாரை விட வளர்ச்சியில் பின்னடைவை சந்தித்துள்ளோம். ஆனால், நம் பிள்ளைகள் 80 முதல் 90 சதவீதம் அளவுக்கு பள்ளிக்கு வந்துள்ளனர். அப்படியென்றால், பிரச்னை பிள்ளைகளிடமா என்பதை யோசிக்க வேண்டும் காரணம் என்ன?

இங்கு கொரோனா காலக்கட்டத்தில் பிள்ளைகள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிகளுக்கு கட்டண பிரச்னையால் மாறினர்.

ஆனால், இன்று வரை அவர்களுக்கு வகுப்பறை, கழிப்பறை, முழுநேர ஆசிரியர்கள் என தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்பதே உண்மை.

பள்ளிக் கல்வித் துறை அறிக்கைக்கு தரப்படும் முக்கியத்துவத்தை பிள்ளைகளின் நலனில் காண்பித்தால் நல்லது.

தமிழகத்தில் மிகப் பெரிய கவனச் சிதறல் பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ளது. அது சினிமா போதை; தவறான அரசியல் பாதை என பல வழிகளில் மாறி உள்ளது.

அதனால் தான் பள்ளி வரும் பிள்ளைகள் பையில் போதைப் பொருளையும், வாயில் மது வாடையையும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

பெண் பிள்ளைகளுக்கு சுதந்திரம் என்பது, ஆண்களுக்கு நிகராக பொது வெளியில் பள்ளி சீருடையுடன் மது அருந்தலாம் என்பதை கற்றுத் தந்துள்ளதுதான், இங்குள்ள பகுத்தறிவு சிந்தனையாளர்களின் சாதனை.

இதனால் படிப்பில் கவனம் இல்லாமல், குடும்ப சூழ்நிலை புரியாமல், சினிமா பகட்டு போதை என்ற தலைமுறையை உருவாக்கியுள்ளது. இதுதான் எழுபது ஆண்டுகால திராவிட இயக்கங்களின் சாதனை. அதுவும், 2022ம் ஆண்டுக்கான அறிக்கை, 2012க்கு முன் தமிழகம் இருந்த நிலைக்கு சென்றுள்ளது என்றும் தெளிவாகக் கூறுகிறது.

தமிழகம் எல்லாவற்றிலும் முதலில் இருக்கிறது, அதற்கு நாங்கள் தான் காரணம் என சுய தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் தான், இந்த பின்னடைவுக்கும் தார்மீகமாக பொறுப்பேற்க வேண்டும்.

கடவுள் மறுப்பு, ஹிந்து மதம் செய்வதெல்லாம் மூடநம்பிக்கை என்று இளைய சமுதாயத்திற்கு விஷமத்தனமான விதைகளை விதைத்தது திராவிடம் என்றால், அது தான் இளைய தலைமுறையை முதுகில் அலகு குத்தி 30 அடி உயரத்தில் சென்று ஹீரோக்களின் 'கட்- அவுட்'களுக்கு பாலாபிஷேகம் செய்யும் இழி நிலைக்குத் தள்ளியுள்ளது. கல்வியில் மாற்றம்

ரூட்டு தல' என்ற பெயரில் உலா வரும் பிள்ளைகள், பேருந்தில் சென்றால் அச்சுறுத்தலாக உள்ளனர். அதுமட்டுமல்ல, அரிவாளோடு மின்சார ரயிலில் மிரட்டும் பயணம் மேற்கொள்கின்றனர். மொத்தத்தில், விஷம் வேரூன்றி உள்ளதற்கு இதெல்லாம் நல்ல உதாரணம்.

வேர்கள் நன்றாக இருந்தால்தான் மரம் பூ, கனி நன்றாக இருக்கும். இளைய தலைமுறை நல்ல தலைமுறையாக வளர்ந்தால்தான் குடும்பம், சமூகம், தேசம் நன்றாக இருக்கும்.

அதனால்தான் அடிப்படையிலிருந்து பிள்ளைகளின் கல்வியில் மாற்றம் வேண்டும் என்பதற்காக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நாம் அதை புறக்கணிக்கிறோம். ஆனால், அதை ஏற்றுக் கொண்ட மாநிலங்கள், கண் முன்னே முன்னேறுவதைப் பார்க்கிறோம்.

மத்திய அரசை எதிரியாக நினைத்துச் செயல்படும் மேற்கு வங்கம் கூட மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் உள்ளது. 92.2 சதவீதம் என்ற நிலையை மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து எட்டிப் பிடித்துள்ளது.

ஆந்திரா, ஒருபடி மேலே சென்று மத்திய அரசின் பாடத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, பிள்ளைகளுக்கு கொடுத்து முன்னேற்றம் மேல் முன்னேற்றம் அடைந்துள்ளது.

'இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், நம்ம ஸ்கூல்' என்று பல்வேறு திட்டங்களை, தேசியக் கல்விக் கொள்கையில் இருந்து எடுத்திருந்தாலும், அதை சரியான முறையில் நடைமுறைப்படுத்தாததே, நம்முடைய இந்த சரிவிற்கான காரணம் ஆகும். முக்கியத்துவம்

மூன்று முதல் 6 வயது வரை பிள்ளைகளுக்கு உறவு, ஒழுக்கம், சுற்றுப்புறத் துாய்மை, இறை நம்பிக்கை, தேசத்தின் மீது பற்று, நமது பண்பாடு, நம் மூதாதையர்கள் பற்றிய பெருமைகள், மொழியின் முக்கியத்துவம் ஆகியவற்றை கதை, ஆடல், பாடல் என்ற வழியில் கற்பித்து நெறிப்படுத்த வேண்டும்.

ஒன்று முதல் 3 வயது வரை அடிப்படை எண் அறிவு, எழுத்தறிவு போதித்து, 3, 5, 8ம் வகுப்புகளில் அவர்களின் கற்றல் புரிதலை சோதிக்க வேண்டும். நிறை - குறைகளை கண்டறிந்து, உடனே அதற்குரிய தீர்வுகளை, அடுத்தடுத்த வகுப்புகளில் சரி செய்ய வேண்டும்.

கலைத்திருவிழா என்ற பெயரில் சினிமா நடன இயக்குனர்கள் வாயிலாகப் பயிற்றுவித்து அனைத்தும் நாடகமாக இல்லாமல், அந்தந்த கிராமங்களில் உள்ள கலை களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களின் விருப்பம் அறிந்து கற்றுத் தந்து அங்குள்ள தொழிலையும் அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான், அவர்களுக்கு நாம் இருக்கும் இடத்தின் மீது பற்றும், சூழலை ஏற்றுக்கொண்டு முன்னேறும் திறனும் உருவாகும்.

செய்ய வேண்டியது?

அரசு போர்க்கால அடிப்படையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். வகுப்பறை, ஆசிரியர், கழிப்பறை, போதிய உபகரணங்கள், சுகாதாரப் பணியாளர்கள் என, ஒரு பள்ளிக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்திவிட்டு ஆசிரியர் களுக்கு இலக்கு நிர்ணயம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு ஊதிய உயர்வு, பணி மாறுதல்கள், அனைத்தையும் செய்ய வேண்டும்.

பிள்ளைகளை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதோ, அதிக எண்ணிக்கையில் மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பது மட்டுமோ இலக்கு அல்ல.

இலக்கு என்பது ஒருங்கிணைந்த ஒன்று. ஒழுக்கம், ஒரு விஷயத்தை அணுகும் திறன், ஒரு பாடத்தை செயலகத்தில் அமைத்து வேறொரு புதிய முயற்சியை யோசிக்க வைப்பது, எந்த போட்டி தேர்வுகள் ஆனாலும் எதிர்கொள்ளும் திறன், எந்த சூழலிலும் தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது என்ற மனோ தைரியம் போன்றவற்றை கற்றுத் தருவது தான், வெற்றியின் ரகசியம்.

பலன் பெறப்போவது

அதை பழக்கப்படுத்தினால் அடுத்த நான்கு ஆண்டுகளில் அதாவது- 2027ல், நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

'டில்லி மாடல் பார்த்து, தமிழக மாடல் உருவாக்குவோம்' என பேசலாம். ஆனால், அவர்கள் எந்த வழிமுறையை ஏற்று மாற்றத்தை ஏற்படுத்தினார்களோ, அதனால் வரும் ஏற்றத்தால் பலன் பெறப்போவது மாணவர்கள் மட்டுமல்ல அரசும் தான்.

ஏனெனில், ஒரு குடும்பத்தின் கனவு பிள்ளைகளை வளமைப்படுத்துவதுதான். அதை இந்த அரசு உண்மையாகச் செய்யுமேயானால், ஏசர், என்.ஏ.எஸ்., மட்டு மல்ல, எந்த கணக்கெடுப்பும் - ஆய்வும் நம் பெருமை பேசும்.

ஆள்வோரின் கையில் ஆயுதம், எப்படி உபயோகிக்க போகின்றனர்? பொறுத்திருந்து பார்ப்போம்.

முனைவர் ரா.காயத்ரி

கல்வியாளர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.