அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்பை நவம்பர் 3வது வாரத்தில் துவக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 4, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்பை நவம்பர் 3வது வாரத்தில் துவக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

சென்னை-6,தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள்

ந.க.எண்.056940/டபிள்யூ4/இ1/2022, நாள். 03.11.2022

பொருள்:- பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி- 2022-2023 ஆம் கல்வியாண்டு உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள்- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் விருப்பம் உள்ள மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு தயார் செய்தல் முதன்மைக் கல்வி - அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் தொடர்பாக

2022-2023 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி போட்டிதேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மேற்காண் பொருள் சார்ந்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கீழ்காணும் அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு வழங்கி செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

> போட்டித் தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் மூன்றாம் வாரத்திலிருந்து சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

> ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (ஒன்றியத்திற்கு ஒரு மையம்) என 412 பயிற்சி மையங்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.

> மேற்கண்ட மையங்களிலிருந்து தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயிற்சி மையங்களை, அம்மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் பயிற்று மொழி தேவைக்கேற்ப தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

> போட்டித் தேர்விற்குப் பயிற்சி பெற விரும்பும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், (அதிகபட்சம்-50 மாணவர்கள் ஒரு ஒன்றியத்திற்கு), 11 ஆம் வகுப்பு மாணவர்கள், 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்திற்கு அதிகபட்சம் 20 மாணவர்கள்) தெரிவு செய்யப்படவேண்டும்.

> OC/OBC - பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு 60% மதிப்பெண்களும், SC/ST/PH பிரிவில் 50 % மதிப்பெண்களாகக் கொண்டு 12 ஆம் வகுப்பில் 50 மாணவர்களும், 11ஆம் வகுப்பில் 20 மாணவர்களும் தெரிவு செய்து அம்மாணவர்களின் விவரத்தினை 1A1, 1A2, படிவங்களில் பூர்த்தி செய்து, idhssed@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மையங்களில் வருகைப் பதிவேடு, மதிப்பெண் பதிவேடு, முறையாக பராமரிக்கப்பட வேண்டும். இது நேரடி பயிற்சி வகுப்புகளாக நடைபெறும்.

2017- 18, 2018-19 மற்றும் 2019-2020 ஆகிய கல்வியாண்டுகளில் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள், ஒன்றிய அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள் மைய ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும்.

பயிற்சி மைய பொறுப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் விவரங்களை படிவம்2ல் பூர்த்தி செய்து idhssed@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 30.11.2022க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.