The Tamil Nadu Primary School Teachers' Alliance has decided to hold a two-phase protest across the state to protest against the malpractices of the insurance companies in the new health insurance scheme for government employees teachers!
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்*
*******
*ஊடகச் செய்தி*
*******
*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 01/2024 நாள்: 04.05.2024.*
*******
*அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளைக் கண்டித்து...*
*மாநிலம் முழுதும் இரண்டு கட்டப் போராட்டங்கள் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு!* *******
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் சென்னையில் சங்கத்தின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு STFI அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண்கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் வரவேற்புரை ஆற்றினார். மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டப் பொருள்கள் குறித்தும், தீர்மானங்களை முன்மொழிந்தும் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கிப் பேசினார். மாநிலச் செயலாளர் எஸ்.டேவிட் ராஜன் நன்றி கூறினார்.*
*கூட்ட முடிவில், தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மாதந்தோறும் அவர்களது ஊதியத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூபாய் 300 வீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு அரசாணையின்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசிடமிருந்து அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள United India Insurance நிறுவனம் மற்றும் MD India, Medi Asst ஆகிய காப்பீட்டு நிறுவனங்கள் அரசாணைப்படி சிகிச்சைக்கான முழுத்தொகையையும் அரசு ஊழியர்களுக்கு வழங்காமல் மிகப்பெரிய மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஒட்டுமொத்த சிகிச்சைக்கான தொகையில் 30% முதல் 40% வரை மட்டுமே தற்போதைய சூழலில் வழங்கி வருகின்றன.* *இதனால் சிகிச்சை பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடன் வாங்கி பல லட்சம் ரூபாய் சொந்தப் பணத்தை மருத்துவமனைகளுக்குச் செலுத்தி வருகின்றனர். இதனால் இத்திட்டத்தின் பலன் அரசாணைப்படி அரசு ஊழியர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் என்ன நோக்கத்திற்காகக் கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் காப்பீட்டு நிறுவனங்களால் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கிட வலியுறுத்தியும், முறைகேடுகள் புரிந்து வரும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 2024-2025 ஆம் நிதியாண்டு முதல் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் (IFHRMS) மூலமாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதந்தோறும் தாமாகவே வருமான வரிப் பிடித்தம் செய்திடும் நடைமுறையைக் கைவிட்டு பழைய முறையில் ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில் வருமான வரித்தகையைப் பிடித்தம் செய்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்டக் கருவூல அலுவலகங்கள் முன்பாக 13.06.2024 அன்று மாலை அந்தந்த மாவட்டக் கிளைகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திடவும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக சென்னையில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு 17.07.2024 அன்று மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்திடவும் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.* *இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.*
*******
*இப்படிக்கு*
*ச.மயில்*
*பொதுச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.