NET - மதிப்பெண் அடிப்படையில் பி.எச்டி மாணவர் சேர்க்கை:UGC தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 30, 2024

NET - மதிப்பெண் அடிப்படையில் பி.எச்டி மாணவர் சேர்க்கை:UGC தகவல்

NET - மதிப்பெண் அடிப்படையில் பி.எச்டி மாணவர் சேர்க்கை:UGC தகவல்

பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயலாளர் மனிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடுமுழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வாகவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வாகவும் 'நெட்' தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. நெட் தகுதித் தேர்வு ஆண்டு தோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் பி.எச்டி ஆராய்ச்சி படிப்பிற்கு நுழைவுத் தேர்வுகளை பல்வேறு நிலைகளாக நடத்தி வருகின்றன. தேசிய கல்விக் கொள்கை-2020 பி.எச்டி மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்பதை ஊக்குவிக்கிறது. இதன்காரணமாக, இதுகுறித்து மதிப்பாய்வு செய்ய பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், யு.ஜி.சி. நிபுணர்கள் குழுவின் 578-வது கூட்டம் கடந்த மார்ச் 13-ந்தேதி கூடியது. இந்த கூட்டத்தில், வரும் 2024-25-ம் கல்வியாண்டு முதல், பி.எச்டி மாணவர் சேர்க்கைக்கு 'நெட்' மதிப்பெண் எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வருகிற ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இனி முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கைக்கும் தேசிய தகுதி தேர்வு கட்டாயம்' - பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய அறிவிப்பு!

தேசியத் தகுதி தேர்வினை (NET) பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆண்டுக்கு இருமுறை நடத்துகிறது. இது முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இளநிலை ஆராய்ச்சியாளருக்கான (Junior Research Fellowship) உதவித்தொகை அளிக்கும் வகையிலும், உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வுக்காகவும் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இப்போது அதில் கூடுதலாக தேசிய கல்விக் கொள்கையின் மிக முக்கிய அம்சமான 'ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு' எனும் திட்டத்தின் கீழ் முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கைக்கும் இனி தேசிய தகுதித் தேர்வு கட்டாயம் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு தேர்வுமுறை 100% மெரிட் மூலம் மட்டுமே இருந்தது. அதிலும் ஒருமுறை தேர்ச்சி பெற்றாலே வாழ்நாள் முழுவதற்கும் செல்லுபடியாகும் என்ற முந்தைய நிலையை மாற்றி, முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கைக்கான தேர்வுகள் 70% மெரிட் மூலமும் 30% நேர்காணல் மூலமும் நடைபெறும் என்றும், ஓராண்டு காலத்திற்கு மட்டுமே இந்த தேர்ச்சி செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்ச்சி பெற்ற ஓராண்டு காலத்திற்குள் முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கை நடைபெறவில்லை என்றால் மீண்டும் மீண்டும் தேசிய தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டிய சூழல் உருவாகும். மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தனக்கேயுரிய முறையில் நுழைவுத்தேர்வினை நடத்தி முனைவர் பட்ட ஆய்வு சேர்க்கையை இதுகாறும் நடத்தி வந்ததை மாற்றி இனி தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் 'ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு' திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.