பாடம் நடத்தாமல் தேர்வு நடத்துவதா? அரசு பள்ளி மாணவகள் அதிர்ச்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 16, 2023

பாடம் நடத்தாமல் தேர்வு நடத்துவதா? அரசு பள்ளி மாணவகள் அதிர்ச்சி

பாடம் நடத்தாமல் தேர்வு நடத்துவதா? அரசு பள்ளி மாணவகள் அதிர்ச்சி

பெரும்பாக்கம் கல்லுாரி சாலையில், 2021ம் ஆண்டு, அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று திறக்கப்பட்டது. ஆறு முதல், பிளஸ் 2 வரை, 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

தனியார் நிறுவனம் ஒன்று கட்டிக் கொடுத்ததால், பள்ளி கட்டமைப்பு தனியார் பள்ளியைப் போல் உள்ளது.

இதனால், மாணவர் சேர்க்கை அதிகரித்ததால், இந்தாண்டு பிள்ளைகளுக்கு இடம் கிடைக்காமல், பல பெற்றோர் ஏமாற்றம் அடைந்தனர்.

இது ஒருபுறமிருக்க, தற்போதுள்ள மாணவ - மாணவியருக்கே வகுப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர்கள் இல்லாததால், ஆங்கில பாடப் பிரிவில் ஆறாம் வகுப்பு சேர்க்கை நடக்கவில்லை.

இதுகுறித்து, பல பெற்றோர், கல்வித் துறைக்கு புகார் அனுப்பி உள்ளனர். அதேபோல, அறிவியல், வரலாறு போன்ற மேலும் சில பாடப்பிரிவுகளுக்கும் ஆசிரியர் இல்லை.

ஆனாலும், பாடம் நடத்தாமலேயே, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படுவதால், மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து மாணவ - மாணவியர் கூறியதாவது:

ஆசிரியர் இல்லாத பாடங்களுக்கு வீட்டில் இருந்தோ, டியூஷன் சென்றோ படித்து வருமாறு கூறுகின்றனர். பண வசதி இருந்தால் தான், டியூஷன் செல்ல முடியும்.

பாடம் நடத்தாமல், எப்படி மாதாந்திர தேர்வு எழுதுவது. பெற்றோர் மூலமாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டால், அவர்கள் முறையாக பதில் கூறுவதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் கூறியதாவது:

பள்ளி துவங்கி இரண்டு ஆண்டுகளே ஆவதால், படிப்படியாகத் தான் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, அதிகாரிகள் கூறினர்.

அதுவரை, தொண்டு நிறுவனங்களான என்.ஜி.ஓ., வழியாக, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும்படி, சமுதாய வளர்ச்சிப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு, நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவ - மாணவியரின் பெற்றோருக்கு படிப்பறிவு குறைவு. அவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கவும் முடியாது. டியூஷன் அனுப்பவும் வசதி கிடையாது.

பள்ளி நிர்வாகம் தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். மாணவ - மாணவியரின் எதிர்காலம் கருதி, காலியாக உள்ள பாடப் பிரிவுகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.