MBBS,BDS படிப்புகளில் சேருவதற்கு சான்றிதழ் பெற மாணவ, மாணவிகள் அலைக்கழிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 9, 2023

MBBS,BDS படிப்புகளில் சேருவதற்கு சான்றிதழ் பெற மாணவ, மாணவிகள் அலைக்கழிப்பு



படிப்புகளில் சேருவதற்கு சான்றிதழ் பெற மாற்றுத் திறனாளிகள் அலைக்கழிப்பு

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு சான்றிதழ் பெற மாற்றுத் திறனாளிகள் அலைக்கழிக்கப்படுவதால், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு முகாம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. வரும் 10-ம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் உள்ள நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர். மாநில இட ஒதுக்கீட்டு கொள்கையின்படி மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வுபெற்ற ராணுவத்தினரின் வாரிசுகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இதில், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் விண்ணப்பிப்பவர்கள், அதற்கான சான்றிதழை, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரிவில் விண்ணப்பிக்க 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் செல்கின்றனர். அங்கு, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மண்டல மருத்துவ வாரியம் மூலமாக சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை, அயனாவரம் மனநலக் காப்பகம் ஆகியவற்றில் மருத்துவப் பரிசோதனை சான்றிதழ் பெற, மாற்றுத் திறனாளிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், வெளியூர்களில் இருந்து வரும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களது பெற்றோர் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகின்றனர். எனவே, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனைத்துத் துறை மருத்துவர்களும் இருக்கும் வகையில், சிறப்பு முகாமை நடத்த வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்கள் கூறியதாவது: மருத்துவப் படிப்புக்கு மாற்றுத் திறனாளிகள் பிரிவில் விண்ணப்பிக்க ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே சான்று பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இங்கு வந்தால், ஒவ்வொரு துறையாக அலைய விடுகின்றனர். அத்துடன் கண் பரிசோதனைக்கு, எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது.

மனநலச் சான்று பெற, அயனாவரம் மனநலக் காப்பகத்துக்கு அனுப்புகின்றனர். இந்தப் பரிசோதனைக்கு தனியாக முகாம்கள் இல்லாததால், புறநோயாளிகளுடன் நாங்களும் செல்ல வேண்டியுள்ளது. இதனால், ஒவ்வொரு மருத்துவமனைக்கும் சென்று வர ஒரு நாளாகிறது. அத்துடன், நண்பகல் 12 மணிக்குள் புறநோயாளிகள் பிரிவுக்கான நேரம் முடிந்து விடுகிறது.

ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைககு மாற்றுத் திறனாளிகளால் குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்திலேயே, பல்துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து, மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் அளிக்க அரசு முன்வர வேண்டும். அதேபோல, மண்டல மருத்துவ வாரியப் பிரிவில் போதிய அளவில் இருக்கைகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.