TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள்... எந்த பதவிக்கு எவ்வளவு இருக்கும்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 5, 2023

TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள்... எந்த பதவிக்கு எவ்வளவு இருக்கும்?



TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள்... எந்த பதவிக்கு எவ்வளவு இருக்கும்?

குரூப் 4ல் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிப்பட்டுள்ள நிலையில், எந்த ரேங்க் வரை வேலை உறுதி செய்யப்படும் என்ற கேள்வி டிஎன்பிஎஸ்சி தேர்வர்களிடத்தில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. நடந்து முடிந்த குரூப் 4 தேர்வின் மூலம், கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) பணியில் 425 காலியிடங்களும், இளநிலை உதவியாளர் பணிகளில் 5,102 பணியிடகளும், வரித் தண்டலர் அடங்கிய பணிகளில் 69 பணியிடங்களும், பண்டக காப்பாளர் (Store keeper) பணியில் 1 இடமும், தட்டச்சர் (Typist) பணியில் 3,314 காலி இடங்களும், சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist) பணியில் 1,186 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. முன்னதாக, கடந்த 2018 -2019 மற்றும் 2019 -2020 ஆண்டுகளுக்கு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொத்தம் 9,882 காலிஇடங்கள் நிரப்பப்பட்டன. தமிழ்நாடு இடஒதுக்கீடு முறையின் கீழ், அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் 1% பழங்குடியினர் பிரிவுக்கும், 15% ஆதிதிராவிடர் பிரிவினருக்கும், 3% அருந்ததியர் பிரிவினருக்கும், 26.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (முஸ்லீம் அல்லாதோர்), 3.5% பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கும், 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர் மரபினருக்கும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 31% இடங்கள் பொது முறையின் கீழ் நிரப்பப்படுகிறது.

ஒவ்வொரு, இடஒதுக்கீடு பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட இரண்டு மடங்கு பேர் மூலச் சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

கடந்தாண்டு, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் நில அளவையர் என மூன்று பதவிகளையும் சேர்த்து மொத்தம் 6,007 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த 6,007 பணியிடங்களுக்கு, பொதுப் பிரிவு பட்டியலில் (Communal Rank) 2607 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், முஸ்லீம் அல்லாத பிசி பிரிவில் முதல் 5,527 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எம்பிசி பிரிவில் 9,057 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பிசி முஸ்லீம் பிரிவில், 24,057 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி பிரிவில் 12,992 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி (அருந்ததியர்) பிரிவில் 17,393 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பழங்குடியினர் பிரிவில் 31,927 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.

இந்தாண்டு குரூப் 4 தேர்வில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் பண்டக காப்பாளர் என மூன்று பதவிகளையும் சேர்த்து மொத்தம் 5,596 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த மூன்று பதவிகளில், கடந்தாண்டை விட கிட்டத்தட்ட 411 பணியிடங்கள் மட்டுமே குறைவாக நிரப்பப்பட உள்ளன. எனவே, தற்போது கட் ஆஃப் சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு பார்த்தால், கடந்தாண்டை போலவே இந்தாண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தட்டச்சர் பணியிடங்கள் கட் ஆஃப் :

கடந்தாண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொத்தம் 2,840 தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. தற்போது, 3,314 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு, பொதுப் பிரிவு பட்டியலில் (Communal Rank) 1,251 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், முஸ்லீம் அல்லாத பிசி பிரிவில் முதல் 4,499 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எம்பிசி பிரிவில் 4,130 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பிசி முஸ்லீம் பிரிவில், 14,688 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி பிரிவில் 6,366 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், எஸ்சி (அருந்ததியர்) பிரிவில் 10,831 வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும், பழங்குடியினர் பிரிவில் 15, 320வரை ரேங்க் பெற்ற தேர்வர்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இந்தாண்டு, தட்டச்சர் பதவிக்கு 474 காலியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, கடந்தாண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, இந்தாண்டு சுருக்கெழுத்தர் தட்டச்சர் பணிக்கும் கூடுதலாக 474 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கட் ஆஃப் மதிப்பெண்கள் சற்று கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு: இன்னும் சில தினங்களில், எழுத்துத் தேர்வின் அடிப்படையில், இளநிலை உதவியாளர்/கிராம நிர்வாக உதவியாளர் (Junior Assistant/VAO), தட்டச்சர்(Typist) , சுருக்கெழுத்தர் (Steno Typist) ஆகிய பதவிகளுக்கு இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தனித்தனியாக வெளியிடும். இந்த தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் சான்றிதழ்களை இணைய வழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் தகுதியினை உறுதிப்படுத்தும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

தேர்வர்கள், அவ்வபோதைய நிலவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.