தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை - CBSE எச்சரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 19, 2023

தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை - CBSE எச்சரிக்கை

தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை - சிபிஎஸ்இ எச்சரிக்கை

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடப்பாண்டுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த பிப்.15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை சுமார் 38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

இந்நிலையில், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அனைத்துவித பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ தலைவர் நிதி சிப்பெர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எவ்வித தவறுகளும் நடைபெறாதவாறு நடத்தி முடித்து, விடைத்தாள்களையும் உரிய முறையில் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி விடைத்தாள் திருத்துதலுக்கான வழிகாட்டு முறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆண்டு 10-ம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டின் தரத்தை உயர்த்துவதற்காக முதுநிலை ஆசிரியர்களும் திருத்துதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மொத்தம் 12 நாட்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகளை முடிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தினமும் ஒவ்வொரு ஆசிரியரும் தலா 20 முதல் 25 விடைத்தாள்களை திருத்தி முடிக்க வேண்டும். எனவே, விடைத்தாள் மதிப்பீட்டில் ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க வேண்டும்.

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை தவறாமல் அனுப்ப வேண்டும். இதற்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பள்ளிகள் மீது அங்கீகாரம் ரத்து, அபராதம் வசூல், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்தல் உட்ளிட்ட நடவடிக்கைகள் எடுக் கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.