ஆசிரியர்கள் 'ஆப்' மூலமே இனி லீவ் எடுக்க முடியும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 6, 2023

ஆசிரியர்கள் 'ஆப்' மூலமே இனி லீவ் எடுக்க முடியும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஆசிரியர்கள் 'ஆப்' மூலமே இனி லீவ் எடுக்க முடியும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு Teachers Can Now Take Leave Through 'App' - School Education Department Notification

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், விடுப்புக்கு விண்ணப்பிக்க வசதியாக புதிய செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2 லட்சம் பல நிலையிலான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆரம்பத்தில், பதிவேடுகள் மூலம் வருகை பதிவேடுகளில் ஆசிரியர்கள் கையொப்பமிட்டனர்.

இந்நிலையில், பதிவேடு நடைமுறைகள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யும் முறை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக் கல்வித்துறையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் அனைத்து பதிவுகளையும் இந்த கணினி மூலம்தான் செய்ய வேண்டும். இந்நிலையில், ஆசிரியர்களுக்கென தனியாக ஒரு செயலியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலிக்கு விடுப்பு நிர்வாக நடைமுறை (லீவ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியை ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொண்டு அதன்மூலம் தங்களுக்கு தேவைப்படும் போது விடுப்புகளை செயலியில் பதிவு செய்ய வேண்டும். அப்போது அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கணினியின் மூலம் அதை சரிபார்த்து ஆசிரியர் எடுக்கும் விடுப்புக்கு ஒப்புதல் அளிப்பார். இந்த செயல்முறைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். பின்னர் இந்த விவரங்கள் சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் பள்ளிகள் நிர்வாக நடைமுறையின் மூலம் கண்காணிக்கப்படும். ஆசிரியர்கள் விடுப்புக்கான இந்த புதிய செயலி(TN-SED Schools App) மூலம் ஆசிரியர்களுக்கு மீதம் இருக்கின்ற விடுமுறை நாட்கள், மருத்துவ விடுப்பு நாட்கள் எத்தனை இருப்பு இருக்கிறது. சாதாரண விடுப்பு நாட்கள் எத்தனை இருக்கிறது உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர்களே தெரிந்து கொள்ள முடியும்.

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் போது சாதாரண விடுப்பு நாட்கள் எத்தனை இருக்கிறது( அதிகபட்சம் 13 நாட்கள்) என்பதையும் பதிவு செய்ய வேண்டும். வரையறை செய்யப்பட்ட விடுப்பு நாட்கள் (அதிக பட்சம்3), ஈடு செய்யும் விடுப்பு நாட்கள்( அதிகபட்சம் 20 நாள்கள்), ஈட்டிய விடுப்பு நாட்கள்(அதிகபட்சம் 240 நாட்கள்) ஆகியவற்றையும், ஈட்டிய விடுப்பு அல்லாத மருத்து சான்றுடன் கூடிய விடுப்பு நாட்கள் ஆகியவற்றையும் ஆசிரியர்கள் இந்த புதிய செயலியில் பதிவு செய்ய வேண்டும்.விடுப்புகளை, ஆசிரியர்கள் இந்த செயலியில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். விடுப்பில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அந்த அதிகாரியைத்தான் ஆசிரியர்கள் அணுகி ஒப்புதல் வழங்கும் போது அதை திருத்தம் செய்ய முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.