பட்ஜெட்டில் வருமான வரி சலுகைகள் : மூன்றில் இரண்டு பேர் எதிர்பார்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 26, 2023

பட்ஜெட்டில் வருமான வரி சலுகைகள் : மூன்றில் இரண்டு பேர் எதிர்பார்ப்பு



பட்ஜெட்டில் வருமான வரி சலுகைகள் : மூன்றில் இரண்டு பேர் எதிர்பார்ப்பு Income tax concessions in Budget: Two-thirds expect

இந்தியாவில் ஆய்வு ஒன்றில் கலந்துகொண்டவர்களில், மூன்றில் இரண்டு பங்கு பேர், எதிர்வரும் பட்ஜெட்டில், வருமான வரி தொடர்பான புதிய சலுகைகளுக்கான அறிவிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வருமான வரி சலுகைகளுக்கான வரம்பை, அரசு அதிகரிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

சந்தை தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான கன்டர் எனும் நிறுவனம், கடந்த ஆண்டு டிசம்பர் 15 முதல் நடப்பாண்டு ஜனவரி 15ம் தேதி வரை, மும்பை, டெல்லி, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 12 முக்கிய நகரங்களில் உள்ள, 21 முதல் 55 வயதிற்குட்பட்ட 1,892 பேர்களிடையே ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இது குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இதில் நான்கில் ஒருவர் வேலை இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தையும், நான்கில் மூன்று பேர் பண வீக்கம் அதிகரித்து வருவது குறித்த கவலையையும், பாதிப் பேர் நாட்டின் பொருளாதாரம், நடப்பு ஆண்டில் வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

மேலும் 50 சதவீதம் பேர் நடப்பாண்டில் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றும், 31 சதவீதம் பேர் பொருளாதார மந்தநிலை தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். நான்கில் ஒருவர் வேலையிழப்பு குறித்து அச்சப்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் பெருந்தொற்றிற்கு பிறகு ஏற்பட்டுள்ள பணவீக்கம் குறித்து, நான்கில் மூன்று பேர் கவலைப் படுவதாகவும், இதை சமாளிக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளனர்.தங்களது குடும்ப வரவு _ செலவுகளை பாதிக்கக்கூடியதாக இருப்பதால், பெரும்பாலான பேர் பொருளாதார மந்த நிலைக்கு ஆளாகாமல், அரசு பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தொற்று நோய் குறைந்திருப்பினும், சுகாதார பாதுகாப்பில், அரசு தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என 55 சதவீதம் பேர் கோரிஉள்ளனர். வழக்கம் போலவே பலர் வருமான வரி குறித்த சலுகைகளை அதிகம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துஉள்ளனர்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.