அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 24, 2022

அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு விடுமுறை ஜன.4 வரை நீட்டிப்பு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

எண்ணும், எழுத்தும் பயிற்சி காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜனவரி 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு டிச.16-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து டிச.24 (இன்று) முதல் ஜன.1-ம்தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 முதல் 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு அரையாண்டு விடுப்பு முடிந்து மீண்டும் ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே 1 முதல் 3-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 3-ம் கட்ட பயிற்சி ஜன.2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜன.4-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜன.5-ம் தேதி திறக்கப்படும். இந்நாட்களில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சியில் தவறாமல் பங்கேற்க வேண்டும். பயிற்சியில் இடம் பெறாதவர்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று இதர அலுவல் பணிகளை செய்ய வேண்டும். விடுமுறை நீட்டிப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு.. அதேநேரம், 6 முதல் 12-ம்வகுப்புகளுக்கான விடுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கெனவே அறிவித்தபடி ஜன.2-ல் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

மேலும், அரையாண்டு விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது, மாணவர்கள் கல்வி நலன் கருதி வீட்டுப் பாடங்கள், செய்முறை பதிவேடு போன்ற அசைன்மென்ட்களை ஆசிரியர்கள் வழங்கலாம் எனவும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.