புதுவை அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 30, 2022

புதுவை அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டம்!

புதுச்சேரி அரசு பள்ளிகளில் 6 - 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர பாடத் திட்டமும், மாஹேவில் கேரள பாடத் திட்டமும் பின்பற்றப்படுகின்றன.

இதனால், ஒரே பாடத் திட்டத்தை மேற்கொள்ள, தனி கல்வி வாரியத்தை அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சாத்தியமில்லாத நிலையில், மத்திய கல்வி வாரிய திட்டத்தை (சிபிஎஸ்இ) பின்பற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதுவையில் ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து, அதன்படி கடந்த 2014-15ஆம் கல்வியாண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பிலிருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலானது. அது படிப்படியாக 2018-19ஆம் கல்வியாண்டில் 5-ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, தற்போதைய தே.ஜ. கூட்டணி அரசு, புதுவையில் 6-ஆம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரைக்கும், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தனர். தற்போது, 6- 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

“6- 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். 2022-2023ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 73 ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு ரூ.1 கட்டணத்தில் இயக்கப்பட்டு வரும்போது பேருந்து இலவச பேருந்தாக மாற்றப்படும்” என புதுவை கல்வித் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.