ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக்குழுக் கூட்ட அழைப்பிதழ் - நாள் 22.08.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 19, 2022

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக்குழுக் கூட்ட அழைப்பிதழ் - நாள் 22.08.2022

ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO)

(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக்குழுக் கூட்ட அழைப்பிதழ் நாள் 22.08.2022

ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்களுக்கு வணக்கம்.

கடந்த 1.8.2022 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தோம். அப்போது ஜாக்டோ ஜியோவின் சார்பாக 12 அம்ச கோரிக்கை மனுவினை அளித்தோம். மேலும், ஏற்கனவே கடந்த ஆட்சியின்போது திட்டமிடப்பட்டிருந்த மாநில மாநாட்டினை, திமுக அரசு பொறுப்பேற்று ஏறத்தாழ 15 மாதங்கள் கடந்த நிலையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தோம். மாண்புமிகு முதல்வர் அவர்களும் அதற்கு இசைவு அளித்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 16.08.2022 அன்று மீண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, மாநாட்டினை எதிர்வரும் செம்டம்பர் 4 அல்லது 5ல் சென்னையில் நடத்துவதற்கும் கேட்டுக் கொண்டோம். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுடன் கலந்தாலோசித்து, தேதியை அறிவிப்பதாகத் தெரிவித்ததன் அடிப்படையில், 18.08.2022 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களை மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளர்கள் குழு சந்தித்து, தேதி மற்றும் மாநாட்டு இடம் தேர்வு குறித்து விவாதித்தனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரு உள் விளையாட்டு அரங்கம், தீவுத் திடல் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டனர். விரைவில் மாநாட்டிற்காக தேதியும் இடமும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் இசைவு அளிக்கப்பட உள்ளது.

2017 முதல் பல்வேறு இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, கூட்டமைப்பின் ஒற்றுமை எனும் பதாகையினை உயர்த்திப் பிடித்து, நமக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதே முதன்மையான இலக்கு என்ற உயரிய நோக்குடன், ஐந்தாண்டுகளாக பயணித்து வருகிறோம். நாம் நமது இலக்கினை அடையும் தருணம் இதுதான். அதற்கான அச்சாரமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளும் ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு அமையும் எள்பதில் யாருக்கும் எந்தவித ஐய்யப்பாடும் இல்லை.

மிக குறுகிய கால இடைவெளியில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டுப் பணிகளை சிறப்புடன் மேற்கொள்வது மாநாட்டில் பெருந்திரளாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பங்கேற்பினை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள நாம் திட்டமிட வேண்டி உள்ளதால், எதிர்வரும் 22.08.2022 திங்கட்கிழமை அன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மையத்தில் காலை 10.00 மணிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமும் அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.00 மணிக்கு உயர்மட்டக்குழு கூட்டமும் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தவறாறு கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.