பள்ளி வளாகத்தை தூய்மை செய்த ஆசிரியர்கள்....! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 1, 2022

பள்ளி வளாகத்தை தூய்மை செய்த ஆசிரியர்கள்....!

பள்ளி வளாகத்தை தூய்மை செய்த ஆசிரியர்கள்....!
விழுப்புரம் சிறுவந்தாடு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் பணிபுரிந்த துப்புரவு பணியாளர் விமலா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதையடுத்து பள்ளியின் தூய்மைப்பணிகளை, கிராம ஊராட்சி தூய்மைப்பணியாளர்கள் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கிராம தூய்மைப் பணியாளர்கள், பள்ளியில் தூய்மைப்பணியை மேற்கொள்ளவில்லை என்பதால் பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளாக பரவிக்கிடந்தது. இந்த சூழலில் இன்று காலை பள்ளிக்கு வருகைபுரிந்த தலைமை ஆசிரியர் முருகவேல் மற்றும் ஆசிரியர் செல்வி ஆகியோர் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பள்ளியை தூய்மை செய்யும்படி வலியுறுத்தினர். அதற்கு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து குப்பைகளை வெளியில் கொட்டினால்தான், அகற்றுவோம் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகவேல் மற்றும் ஆசிரியை செல்வி பள்ளி வளாகத்தில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் தூய்மைப்பணியில் ஈடுபட்டு சுத்தம் செய்தனர். அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் தூய்மைப்பணிக்கு ஒரு நபரை நியமிக்க கூறியுள்ளனர். அதற்கு ஊராட்சி நிர்வாகம், தாங்கள் கூறும் நபர்களைதான் பணி நியமனம் செய்ய வேண்டும் எனக்கூறியதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிப்படைந்துள்ளனர். எனவே எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தூய்மைப்பணியாளர்களை நியமனம் செய்ய மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.