முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை, 25,000 ரூபாய் அபராதம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Primary Education Officer sentenced to one week in jail, fined Rs. 25,000 - High Court orders action
ஓய்வூதிய பணப் பலன்களை வழங்காத முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு 25,000 ரூபாய் அபராதம், ஒரு வாரம் சிறை தண்டனை - பதிவாளர் முன் உடனடியாக சரண்டர் ஆக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
அரசுப் பள்ளியில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பண பலன்கள் வழங்காத கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஒரு வார சிறை தண்டனையும், ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி தூய்மைப் பணியாளர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் சேர்ந்த பொன்னம்மாள், ஸ்ரீதேவி, மேரி மகள் செல்வக்கிளி தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய பொன்னம்மாள், ஆரல் பெருமாள் புரம் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய ஸ்ரீதேவி, மார்த்தாண்டம் கொடுங்குளம் அரசு பள்ளியில் பணியாற்றிய செல்வக்கிளி ஆகியோர் தூய்மை பணியாளராக 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி உள்ளனர். இவர்களுக்கு அப்போது 105 ரூபாய் மாத சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 2011 ஆண்டு ஓய்வு பெற்றுள்ளனர்.
ஓய்வூதிய பண பலன்களை வழங்காத விவகாரம்:
இந்நிலையில் தங்களுக்கு அரசு விதிமுறைகளின் படி பணி வரன்முறை செய்து தங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பண பலன்கள் உள்ளிட்ட ஓய்வூதியத் தொகை வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை அப்பொழுது விசாரணை செய்த நீதிபதி விக்டோரியா கவுரி தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பணப் பலன்களை 12 வாரங்களுக்குள் வழங்க உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மூன்று பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி விக்டோரியா கௌரி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தரப்பில் மனுதாரரின் கோரிக்கை பணி வரன்முறை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைப் பார்த்து கோபம் அடைந்த நீதிபதி விக்டோரியா கௌரி, இரண்டு வருடங்கள் ஆகியும் இதுவரை அவர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களை வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும் சென்னை உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இது குறித்து தெளிவான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உத்தரவுள்ள நிலையில் இதுவரை உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பால தண்டாயுதபாணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.
அதனை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்டக் கல்வி அலுவலர் மோகன் ஆகியோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வாரம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
அதேபோல் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை இரண்டு வாரங்களில் நிறைவேற்றி அதன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதி, நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி உடனடியாக நீதிமன்றப் பதிவாளர் முன் சரண்டர் ஆக வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.