CPS பாதிப்பிலிருந்து மீண்டு ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்டவற்றைப் பெற்றிட என்ன செய்ய வேண்டும்? - செல்வ.ரஞ்சித் குமார்_ - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, September 14, 2024

CPS பாதிப்பிலிருந்து மீண்டு ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்டவற்றைப் பெற்றிட என்ன செய்ய வேண்டும்? - செல்வ.ரஞ்சித் குமார்_



CPS பாதிப்பிலிருந்து மீண்டு ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்டவற்றைப் பெற்றிட என்ன செய்ய வேண்டும்? - செல்வ.ரஞ்சித் குமார்_

CPS பாதிப்பிலிருந்து மீண்டு ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்டவற்றைப் பெற்றிட என்ன செய்ய வேண்டும்?

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

ஒன்றிய அரசின் புதிய ஓய்வூதியத் திட்ட மறுகட்டமைப்பு அறிவிப்பும், பணிக்கொடையை 25 இலட்சமாக உயர்த்திய அறிவிப்பும் தமிழ்நாடு அரசின் அனைத்துத்துறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் & பொதுத்துறை ஊழியர்களின் மத்தியில் பேசுபொருளாகி ஓய்வூதிய உரிமை குறித்த உணர்வு வேட்கை யாவரிடையேயும் பற்றத் தொடங்கியுள்ள சூழலில்,

தமிழ்நாட்டின் அனைத்துத்துறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் & பொதுத்துறை ஊழியர் சங்கங்களுக்கும், 22.09.2024 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள *'பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் தனித்த கோரிக்கைக்கான ஒருங்கிணைந்த போராட்டக் களத்தைக் கட்டமைக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்கு'* CPS ஒழிப்பு இயக்கமானது அழைப்பு விடுத்துள்ளது.

தாங்கள் சார்ந்திருக்கும் சங்கத்திற்கும் வரப்பெற்றுள்ள மேற்படி அழைப்பிற்குண்டான ஆக்கப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்ள தங்களது சங்கத்தை வலியுறுத்துங்கள்! "நாமே பெரிய சங்கம். நாம் ஏன் அங்கு செல்ல வேண்டும்?" என உங்களது சங்கம் கூறினால், *பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் தனித்த கோரிக்கைக்கான போராட்ட அறிவிப்பை வெளியிட உங்களது சங்கத்தை வலியுறுத்துங்கள்!

"தனிச்செல்லாம் போராட முடியாது. . . அதென்ன நமக்கு மட்டுமான கோரிக்கையா என்ன?" என்று உங்களது சங்கம் கூறினால், இருக்குதா இல்லையானு தெரியாது மறைந்து போன *ஜாக்டோ-ஜியோவைத் தேடிக் கண்டுபிடித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் தனித்த கோரிக்கைக்கான போராட்ட அறிவிப்பை வெளியிட வைக்க உங்களது சங்கத்தை வலியுறுத்துங்கள்!

நாமெல்லாம் சொல்லி ஜாக்டோ-ஜியோ கேட்டுப்புடுமா? என்று உங்களது சங்கம் கூறினால், *நீங்கள் உயிரென மதிக்கும் சங்கத்தில் உறுப்பினராகத் தொடர்ந்து கொண்டே, CPS ஒழிப்பு இயக்கத்திற்குத் தங்களது முழுமையான ஆதரவையும், களத்தில் உங்களது பங்களிப்பையும் அளித்து நமக்கான வாழ்வாதாரக் கோரிக்கைக்காக ஒன்றிணைய வாருங்கள்! ச்சேச்ச. . . இது எதையுமே நாஞ்செய்யமாட்டேன்! 20 வருசமா மூத்தவுகயெல்லாம் என்னத்த கிழிச்சாங்க? என்று சமூக வலைதளங்களில் பொங்குவது மட்டுமே எனது பிறவிப் பெருங்கடமை என்று இருப்பீர்களானால். . . .

நாளைய தலைமுறை தங்களைவிடக் கொடுமையாகத் தரந்தாழ்ந்து தங்களை விமர்சிக்கத் துணியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் விமர்சனமெல்லாம் என்னையென்ன செய்துவிடப் போகிறது என்று கடந்து நீங்கள் சென்றாலும்,

உங்களது ஓய்வுக் காலத்தையோ, உங்களுக்குப் பின்னான உங்களது குடும்ப பொருளாதார நிலையையோ ஒவ்வொரு மாதமும் - ஒவ்வொரு நாளும் கடத்துவதே பெரும்பாடாக இருக்கும் என்பதை மறவாதீர்!!

*நமக்கான எதிர் காலத்திற்கு நாமே அழுத்தம் தர / களத்திற்கு வரத் தயங்கினால் வேறு எவராலும் நமக்கு விடியலில்லை!

*போராட்டக் களத்தில்

*ஒன்றுபட்டால்

*உண்டு வாழ்வு!

*நம்மில்

*ஒற்றுமை நீங்கிடில்

*எந்நாளும் தாழ்வே!!! பின்குறிப்பு :

1. CPS ஒழிப்பு இயக்கம் என்பது பலர் மூச்சுமுட்ட உருட்டிக் கொண்டிருப்பது போல தனிச்சங்கம் அல்ல. அது CPS ஒழிப்பிற்கான போராட்ட நடவடிக்கைக் குழு (Movement) மட்டுமே. இந்திய அளவிலும் NPS ஒழிப்பிற்காக இது போன்ற போராட்ட நடவடிக்கைக் குழுக்கள் மாநிலம் தோறும் உண்டு. அவர்களின் ஒன்றுபட்ட தனித்த கோரிக்கைக்கான கூட்டு நடவடிக்கைகளால் தான் பல மாநிலங்களில் NPSஐ ஒழிக்க முடிந்துள்ளது. UPS என்ற ஈயப் பூச்சு வேலையையும் ஒன்றிய அரசு செய்ய முன்வந்துள்ளது. இதை போராளிகள் எவரும் ஏற்று சமரசமாகிவிடவில்லை.

2. 'நம்ம தலைவரு கண்டிப்பா அவராவே செய்வாரு!', 'இப்பப்போராடுனா பா.ச்ச.க உள்ள பூந்துரும்!' என்று இன்னமும் உருட்டிக்கொண்டிருப்போரையே மலைபோல நம்புவீர்கள் எனில், *உங்களது சங்கத்தில் இதுவரை ஓய்வுற்ற & இறந்த CPS பாதிப்பாளர் குடும்பங்களுக்கு மாதம் தோறும் உங்க சங்கத்தில் இருந்தே இடைக்கால நிவாரணத் தொகையைத் திரட்டி வழங்க முன்வருமாறு வலியுறுத்துங்கள்.* அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை எனில். . . . மீண்டும் ஒருமுறை முழுப்பதிவையும் படித்துவிட்டு நல்லதொரு முடிவை எடுங்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.