தொடக்கக்கல்வித்துறையில் மாநில முன்னுரிமை; பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஆசிரியர்கள் நன்றி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 8, 2024

தொடக்கக்கல்வித்துறையில் மாநில முன்னுரிமை; பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஆசிரியர்கள் நன்றி!

தொடக்கக்கல்வித்துறையில் மாநில முன்னுரிமை; பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஆசிரியர்கள் நன்றி!

தொடக்கக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியரிகளுக்கு மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளதற்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழியை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் சந்தித்து தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். தொடக்கக்கல்வித்துறையில் சார்நிலைப் பணிகளின் சிறப்பு விதிகளில் 9ஆம் விதிகளில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஒர் அலகு என உள்ளதனை மாவட்ட முன்னுரிமை அல்லது மாநில முன்னுரிமை என மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்து, உரிய பரிந்துரையினை அரசுக்கு அளிப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரைத் தலைவராகவும், உறுப்பினர்களாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை பணியாளர் தொகுதி இணை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டனர்.

பள்ளிக்கல்வித்துறையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாநில முன்னுரிமை என்ற நடைமுறை பின்பற்றி பதவி உயர்வு வழங்கப்படுகிறது. தொடக்கக்கல்வி நிர்வாகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) இதுநாள் வரை ஒன்றிய அளவில் கடைபிடிக்கப்பட்டது. இதனால் பதவி உயர்வு அந்த ஒன்றிய அளவில் மட்டுமே வழங்கக்கூடிய நிலையில் இருந்தது. இதன் காரணத்தால் மூத்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்த நிலையில், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், அவர்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்டிருந்த அரசாணையில், "தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மாநில அளவிலான பணி விதிமுறைகள் 2023 டிசம்பர் 31ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். ஒன்றிய அளவில் பணியாற்றும் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு இனி மாநில அளவிலான முன்னுரிமை பின்பற்றப்படும். பணி நியமனம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவை மாநில அளவில் முன்னுரிமை பின்பற்றப்படும்" என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை ஆகியோர் சந்தித்து தங்களின் நன்றியை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.