முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்காத தனியார் கல்லூரிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 26, 2023

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்காத தனியார் கல்லூரிகள்



முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்காத தனியார் கல்லூரிகள்

தேசிய மருத்துவ ஆணையம் ஆன்லைன் மூலம் நடத்திய ஆய்வில், நாட்டில் உள்ள 27 சதவீத முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் எந்த உதவித்தொகையும் வழங்குவதில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அதுபோல, 54 சதவீத முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையைக் காட்டிலும் மிகக் குறைவான உதவித் தொகையே வழங்கப்படுவதும் தெரிய வந்திருக்கிறது.

நாட்டில் உள்ள 213 சுயநிதி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் சுமார் 8000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான தகவல்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு மற்றும் மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்கு நிகராக, சுயநிதி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவம் பயிலும் அனைத்து மாணவர்களும் உதவித் தொகை பெற தகுதியானவர்களே. தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியானது, முதுநிலை மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.95,000 உதவித் தொகை வழங்குகிறது.

எம்பிபிஎஸ் இன்டென்ஷிப் மாணவர்களுக்கு மாதந்தோறும் கிட்டத்தட்ட ரூ.26,000 வழங்குகிறது. கூகுள் விண்ணப்பம் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடமிருந்து தகவல்கள் தேசிய மருத்துவ ஆணையத்துக்குக் கிடைத்துள்ளது.   

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.