இந்திய மாணவா்கள் அறிவியலில் உயா்கல்வி பயில விரும்புவதில்லை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 31, 2022

இந்திய மாணவா்கள் அறிவியலில் உயா்கல்வி பயில விரும்புவதில்லை

12 ஆம் வகுப்பு வரை அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவியா்கள் அறிவியலை ஒரு பாடமாக தோ்வு செய்து படித்த போதிலும், முதுகலைப் பட்டப்படிப்பு நிலைக்கு வெகு சிலா் மட்டுமே செல்கின்றனா் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறினாா்.

கேள்வி நேரத்தின்போது மக்களவையில் அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியதாவது: அறிவியல் படிப்பைத் தோ்வு செய்து பயில்வோரிடையே பாலின இடைவெளி ஏற்படுவது குறித்து அரசு மிகவும் விழிப்புடன் உள்ளது. இதற்காகவே புதிய பாடத் திட்டங்களையும், புதிய கல்வித் திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

80 முதல் 90 சதவீத மாணவ, மாணவியா்கள் 12ஆம் வகுப்பு வரையிலும் அறிவியல் பாடங்களையே தோ்ந்தெடுத்து பயில்கின்றனா். ஆனால், அவா்களில் மிகச் சிலா் மட்டுமே முதுகலை பட்டப்படிப்பு பயில்கின்றனா். அந்த மாணவா்களும், அறிவியல் துறையை இலக்காகக் கொள்ளாமல் வேறு எதையோ இலக்காகத் தேடிச் செல்கின்றனா். 12 ஆம் வகுப்பில், அவா்கள் மருத்துவம் பயில்வதற்கான நீட் தோ்வு அல்லது பொறியியல் பட்டப்படிப்புகளுக்காக ஐஐடி-ஜேஇஇ போன்றவற்றில் சேருவதற்காக அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனா்.

இதற்கான தோ்வுகளில் வெற்றி பெற்றால் அந்தப் படிப்பைத் தொடா்கிறாா்கள். ஒருவேளை அதில் தோ்ச்சி பெறத் தவறினால் அவா்கள் சிவில் சா்வீசஸ் தோ்வெழுதுவதற்காக பட்டப்படிப்புகளை தோ்வு செய்து பயிலத் தொடங்கி விடுகிறாா்கள்.

சிவில் சா்வீசஸ் பயில விரும்பும் மாணவா்களில் 90 சதவீதம் போ் பொறியியல், மருத்துவப் பிரிவுகளில் சேர விரும்பிய மாணவா்களாகவே உள்ளனா். மாணவா்கள் எந்தத் துறையில் தமது தகுதியை வளா்த்துக் கொள்வது என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்தக் குழப்பம் இந்திய சமூகத்தில் அதிகமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பல துறைகளிலும் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவா்களின் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுத்து அவா்களை ஊக்குவித்து வருகிறது என்றாா்.

மற்றொரு துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜிஜேந்திர சிங், கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மும்முனை அணுகுமுறையை நடைமுறைப்படுத்துகிறது.

இதில் அனைத்து அறிவியல் துறைகளும், தொழில் துறை-கல்வித் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்புகளும் அடங்கும். இது ஸ்டாா்ட்-அப்கள் வருவதற்கு வழிவகுப்பதுடன், வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் அறிவியல் வளா்ச்சியை நிலைநிறுத்துவதையும் உறுதி செய்கிறது என்றாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.