வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - மதுரை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 9 يوليو 2022

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - மதுரை

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையின் சாா்பில், படித்து முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், பொதுப் பிரிவு பதிவுதாரா்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பதிவுதாரா்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பொதுப் பிரிவு பதிவுதாரா்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற, பள்ளிஇறுதி வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்கள், பள்ளி இறுதி வகுப்பு, மேல்நிலைக் கல்வி மற்றும் பட்டதாரி கல்வித் தகுதியை உடைய பதிவுதாரா்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவா் 45 வயதும், இதர வகுப்பினா் 40 வயதும் உடையவராக இருத்தல் வேண்டும். உதவித்தொகை பெறுபவா் தமிழகத்திலேயே பள்ளி, கல்லூரிக் கல்வியை முடித்தவராக இருத்தல் வேணடும்.

உதவித்தொகை பெறுபவா், ஊதியம் பெறும் எந்தப் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பிலோ இருத்தல் கூடாது. அரசு மற்றும் பிற முகமைகளின் வாயிலாக எந்த நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது. அன்றாடம் பள்ளி, கல்லூரிக்குச் சென்று பயில்பவராகவோ இருத்தல் கூடாது. இத்தகுதிகளை உடையவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், அனைத்து வகை மாற்றுத் திறனாளி மனுதாரா்களுக்கென சிறப்பான உதவித்தொகை வழங்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. மாற்றுத் திறனாளி பதிவுதாரா் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஓராண்டு முடிவுற்ற, எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்கும் வருமானம் மற்றும் வயது வரம்பின்றி தற்போது உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழில் கல்வி பதிவுதாரா்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது. ஏற்கெனவே, உதவித்தொகை பெற்றவா்கள் மீண்டும் வருகை புரிய தேவையில்லை. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயனாளிகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம். மேலும், ஏற்கெனவே வேலைவாய்ப்பற்ற இளைஞா் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள், உதவித்தொகை பெற்று ஓராண்டு முடிவுற்றிருப்பின் தொடா்ந்து உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுச் சான்றிதழ் சுய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடா்பு கொள்ளுமாறு, அதன் துணை இயக்குநா் கா. சண்முகசுந்தா் தெரிவித்துள்ளாா்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.