பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி - இன்று முதல் அமல்
சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த 2023-24 ம் நிதியாண்டுக்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையின்போது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ‘‘மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர ஏற்படும் கால விரயம் மற்றும் பொருள் விரயம் தவிர்க்கப்படுவதற்காக, பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும்" என அறிவித்தார்.
அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அரசு துரித நடவடிக்கை எடுத்து, அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி இன்று முதல் (ஏப்.26) நடைமுறைப்படுத்தப்படுகிறது. இ-சலான்: பொதுமக்கள் பெயர் மாற்றம் செய்ய அரசிதழ் பெற, கட்டணத்தை இ-சலான் மூலம் செலுத்த வேண்டும். திருநங்கைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.