9ம் வகுப்பு தேர்ச்சிக்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 26 أبريل 2023

9ம் வகுப்பு தேர்ச்சிக்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்



9ம் வகுப்பு தேர்ச்சிக்கு 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, தேர்ச்சி செய்வதற்கு, 75 சதவீத வருகைப்பதிவு கட்டாயம் என, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என்ற அனைவருக்கும் தேர்ச்சி முறை பின்பற்றப்பட்டது. தற்போது, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே, ஆல் பாஸ் என்ற நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, 10ம் வகுப்புக்கு தேர்ச்சி செய்வதற்கு, சில கட்டுப்பாடுகள் விதித்து, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சிக்கு, அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும். விதிகளுக்கு அப்பால் தேர்ச்சி வழங்கினால், அதற்கு முதன்மை கல்வி அலுவலரின் சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அடுத்த வகுப்புக்கு செல்ல தகுதியுடையோர் ஆவர். 9ம் வகுப்பு தேர்வில், ஒரு மாணவர், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி பாடத்தையும் சேர்த்து, மொத்தம், 150க்கு குறையாமல் மதிப்பெண் பெற வேண்டும். ஆண்டு இறுதி தேர்வில் ஒரு பாடத்திலோ அல்லது அனைத்து பாட தேர்வுகளுக்குமோ வராவிட்டால், தக்க மருத்துவ சான்றிதழ் கொடுத்த பின், அந்த மாணவரின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், ஒன்பதாம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு, வருகைப்பதிவு, 75 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.