மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 22 அரை நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
குளறுபடி
கணக்கெடுப்புப் பணிக்கான களப்பணியாளர்கள் நியமனத்தில்...
22 அரை நாட்கள் விடுப்பு அளிக்க ஆசிரியர்கள் வலியுறுத்தல்
திண்டுக்கல், ஜூலை 20 –
மாவட்டத்தில் ஆகஸ்டில் வீடுகள் மற்றும் வீட்டுப் பட்டியல் விவரங்களை சேகரிக்கும் பணி துவங்க உள்ளது. இதில் தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் களப்பணியாளர்களாக நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பணி ஆணைகளை முழுமையாக வழங்காததாலும், மாவட்ட முதன்மை கணக்கெடுப்பு அலுவலரான கலெக்டரிடம் களப்பணியாளர்களுக்கான முழுமையான பட்டியலை இன்னும் வழங்காததாலும், கணக்கெடுப்புப் பணிகளை துவங்குவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. மேலும் கேரள மாநிலத்தில் உள்ளது போல் ஒருங்கிணைப்புப் பணிக்காக 22 அரை நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
சுயக்கணக்கெடுப்பு துவக்கம்
நாட்டின் அனைத்து விதமான வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கான திட்டங்களைத் தீட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட வீடுகள் மற்றும் வீட்டின் வகைகள் குறித்த கணக்கெடுப்பு ஆக.1ல் துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக பொது மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் சுய விவரங்களை அலைபேசி மூலம் பதிவேற்றும் சுயக்கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 17 முதல் துவங்கி உள்ளது. இந்நிலையில் ஆக.1ல் துவங்க உள்ள முதற்கட்ட கணக்கெடுப்புப் பணியில் 4 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த களப்பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பல குளறுபடிகள் நீடிக்கிறது. உதாரணத்திற்கு முதன்மை கல்வி அலுவலகம் பரிந்துரைக்காத முதுகலை ஆசிரியர் களுக்கு பணி ஆணையை வழங்கி உள்ளனர்.
மேலும் புற்றுநோய், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதுகலை பெண் ஆசிரியர்கள், ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் உள்ள முதுகலை, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் ஆசிரியர்கள் வசிக்கும் இடத்திற்கும் களப்பணிக்காக செல்லும் இடத்திற்கும் நீண்ட தூரம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளதால் ஆசிரியர்கள் பணி ஆணைகளை ஏற்றாலும், பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாக புலம்பி வருகின்றனர்.
இதனால் ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பிற துறை அலுவலர்கள் என்பார் களப்பணியில் ஈடுபட்டாலும் அவர்களின் 'சுயவிருப்பம்' கேட்டறிந்து பணி ஆணைகளை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
முழுமையான களப்பணியாளர்கள் பட்டியலை பெற்று, சுய விருப்பம் உள்ள ஆசிரியர்கள், தன்னார்வலர்களை நியமிப்பதும் மாவட்ட முதன்மை கணக்கெடுப்பு அலுவலரின் தலையாய கடமை என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 22 அரை நாட்கள் விடுப்பு வழங்கப்படுமா?
"உடல் பிரச்சனைகள், சிகிச்சை எடுக்கும் நபர்கள் உள்ளிட்ட காரணங்களால் வரமுடியாத ஆசிரியர்கள் தரவுகளை சேகரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேலும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் பொதுத்தேர்வு குறித்த சிறப்பு பாடத்திட்ட கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும் என்பதால் முதுகலை, இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு முன், சுய விருப்பம், பணியிட தூரம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து ஆய்வு செய்து பணிகளை வழங்க வேண்டும். மிக முக்கியமாக முதுகலை ஆசிரியர்கள் பெயரை முதன்மை கல்வி அலுவலகம் பரிந்துரைக்காத நிலையில், கலெக்டர் அலுவலக கணக்கெடுப்புப்பிரிவில் இருந்து வழங்கப்பட்டது என்றார்கள். சி.இ.ஓ., அலுவலகத்தில் கேட்டால் எழுத்துப்பூர்வ பட்டியலை காண்பித்து, நாங்கள் பரிந்துரைக்க வில்லை என்கின்றனர். கலெக்டர் பணிகளை துவக்க வேண்டும். மேலும் கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது போல் 22 அரை நாட்கள் விடுப்பு கணக்கெடுப்புப் பணிக்கு வழங்கி கலெக்டர் உத்தரவிட வேண்டும். ஏனெனில் டிஜிட்டல் நடைமுறையில் கணக்கெடுப்புப் பணிகளை எடுத்தாலும், ஒருங்கிணைப்பு பணிகளை முடிக்க ஆசிரியர்களுக்கு இந்த விடுப்பு பேருதவியாக இருக்கும். இதுகுறித்து கலெக்டர் பரிசீலனை செய்திட சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.," என்றார்.
-பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, திண்டுக்கல்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.