கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு - முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடநூல்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 2 يونيو 2025

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு - முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடநூல்கள்



கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று (ஜூன் 2) முதல் திறக்கப்பட உள்ளன. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 7 முதல் 17-ம் தேதி வரையும், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8 முதல் 24-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 25-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று(ஜூன் 2) முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்ற நலத்திட்ட பொருட்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.

இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து ஆசிரியர்களுக்கும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில், இந்த கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன். ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கு உன்னை அற்பணி என்ற முன்னோர்கள் வாக்கை உறுதி ஏற்று நாம் பள்ளிக்குச் செல்வோம். பள்ளியின் வளாகத்தை தூய்மையாக்கி அதன் சுகாதாரத்தை உறுதி செய்வோம்.

இதுதவிர மாணவர்களை அன்பாக நேசித்து கற்பித்தலை மேற்கொள்வதுடன், அவர்களின் திறன்களை கண்டறிந்து மேம்படுத்த வேண்டும். பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து பள்ளி வளர்ச்சிப் பணிகளுக்கு செயலாற்ற வேண்டும். பள்ளி வளாகம் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுரைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.