வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள்: பள்ளிக் கல்வித் துறை அரசாணை சொல்வது என்ன? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 29 مايو 2025

வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள்: பள்ளிக் கல்வித் துறை அரசாணை சொல்வது என்ன?



வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள்: பள்ளிக் கல்வித் துறை அரசாணை சொல்வது என்ன?

அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பாட விவரங்கள் வடிவமைத்து போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: ”அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் வகையில் கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும்.

இது தவிர வாரந்தோறும் தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றில் பேச்சுப் போட்டி, கதை சொல்லுதல், நடித்துக் காட்டுதல், குழு விவாதம், பட்டிமன்றம் போன்றவை நடத்தப்பட்டு மாணவர்களின் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட்டார்.

இதை செயல்படுத்தும் வகையில் மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த பருவம், மாதம், வாரம், வகுப்பு வாரியாக உள்ள பொருண்மைகளுக்கான விவரங்களை மாநில கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைக்க வேண்டும். மேலும், பள்ளிகளில் இந்த திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் வாயிலாக அமல்படுத்தவும் அனுமதி வழங்கக் கோரி தொடக்கக் கல்வித் துறை கருத்துரு வழங்கியது. அதையேற்று அதற்கான அனுமதியை வழங்கி ஆணையிடுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 1 முதல் 8ம் வகுப்பு வரை 3 பருவங்களிலும் என்னென்ன தலைப்புகளில் வாசிப்பது, கதை சொல்லுவது, விவாதிப்பது, கலந்துரையாடுவது என்பது குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழக அரசின் சின்னங்கள், நெகிழியைத் தவிர்ப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பனை மரத்தின் சிறப்பு, தேசத் தலைவர் ஜவஹர்லால் நேரு, இயற்கை அளித்த கொடை, உடலை உறுதி செய், நேர்மையின் சிறப்பு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய பணிகள், எனக்குப் பிடித்த நண்பன் என பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.