அரசு பள்ளிகளில் கட்டாய வசூல்? - கடிவாளம் போடுமா கல்வி துறை
செங்கை மாவட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரிலும், தற்காலிக ஆசிரியர் பணி முறையிலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முறைகேடுகளை களைய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், புதிதாக சேரும் மாணவர்களின் பெற்றோர்களிடம், பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு நன்கொடை என்ற பெயரில், 300 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதே போல, தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதிலும் மோசடிகள் அரங்கேறுவதாக கூறப்படுகிறது. இது குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் அனைத்தும் இலவசம். ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில், புதிதாக சேரும் மாணவர்களிடம், பெற்றோர் ஆசிரியர் கழக நிதி என்ற பெயரில் சில நுாறுகளில் தொடங்கி பலநுாறுகளில் பணம் வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து பெற்றோர் கேள்வி எழுப்பினால், 'பள்ளியின் பராமரிப்பு பணிகளுக்கு அரசு எவ்வித நிதியும் தருவதில்லை. எனவே, இந்த தொகையை வைத்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறோம்' என கூறி, வசூலில் ஈடுபடுகின்றனர்.
இதற்கு ரசீது எதுவும் தரப்படுவதில்லை. இந்த தொகை, இறுதியில் யாரிடம் போய்ச் சேர்கிறது என்பதும் மர்மமாக உள்ளது.
ஆசிரியர்கள் பற்றாக்குறையால் எழும் கற்பித்தல் குறைபாட்டை களைய, தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்தி, அவர்களுக்கு ஊதியம் வழங்க எஸ்.எம்.சி., என்ற, பள்ளி மேலாண்மை குழு நிதி தொகுப்பு, கடந்த 2019ல் உருவாக்கப்பட்டது.
அதன்படி, 1,500 மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு ஆண்டிற்கு ஐந்து லட்சம் ரூபாய், 2,500 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிக்கு ஆண்டிற்கு ஏழு லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் தற்காலிக ஆசிரியருக்கு 15,000 ரூபாய், பிளஸ் 1 - பிளஸ் 2 ஆசிரியருக்கு 18,000 ரூபாய் என, இந்த நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளின் அனுமதியோடு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்தி, அவர்களுக்கு 'எஸ்.எம்.சி.,' நிதி தொகுப்பு வாயிலாக சம்பளம் வழங்கிக்கொள்ளலாம். ஆனால், இந்த சலுகை பல பள்ளிகளில் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது.
அதாவது, 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறக்கூடிய நிரந்தர ஆசிரியர்கள், அதிகாரிகளின் ஆதரவோடு, தங்கள் பணிக்கு தற்காலி ஆசிரியர்களை நியமித்து கொள்கின்றனர். வேலைக்கு செல்லும் நாட்களில் கூட, தங்களின் சொந்த வியாபாரம் மற்றும் இதர பணிகளை பள்ளியிலிருந்தே செய்து முடிக்கின்றனர்.
தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் எஸ்.எம்.சி., நிதிக்கு, தகுந்த தணிக்கை முறை இல்லை. எனவே, உரிய தணிக்கையோடு இந்த நிதி பயன்படுத்தப்பட்டால், முறைகேடுகளை தவிர்க்க முடியும்.
தவிர, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு, அந்த பாடப் பிரிவுகளில் சேரும்படி, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். மாவட்ட கல்வி அதிகாரிகள் கூர்ந்து ஆய்வு செய்த பின்னரே, ஒரு பள்ளியில் புதிய பாடப் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
ஆசிரியர் சங்கத்தில் உள்ளவர்களே பொது தேர்வு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள், 'என்னுடைய பள்ளிக்கு நீங்களும், உங்களுடைய பள்ளிக்கு நானும் சென்று மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்துவோம்' என்ற புரிந்துணர்வுடன், தேர்வு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
செங்கை மாவட்டத்தில் இது போன்ற முறைகேடுகளை களைந்தால் தான், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, முடியும். இதற்கு பள்ளிக் கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.