அரசுப் பள்ளியில் சுருண்டு விழுந்து பணியில் இருந்த ஆசிரியர் மரணம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 30 نوفمبر 2024

அரசுப் பள்ளியில் சுருண்டு விழுந்து பணியில் இருந்த ஆசிரியர் மரணம்



அரசுப் பள்ளியில் சுருண்டு விழுந்து பணியில் இருந்த ஆசிரியர் மரணம்

நாகை மாவட்டம், தலைஞாயிறு அடுத்த வாட்டாகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் கி. குமார் (57) பள்ளி வளாகத்தில் மாரடைப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை, கொடப்பள்ளி பகுதியை சேர்ந்த இவர், வாட்டாகுடி பள்ளியில் கடந்த 15 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் வட்டாரத் தலைவராவும் செயல்பட்டு வந்தார். அவர் தலைஞாயிறில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ஆசிரியர் குமார் தான் பணிபுரிந்து வந்த பள்ளிக்கு பணிக்காக வந்தார். மதியம் 3 மணி அளவில் பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அப்படியே சுருண்டு விழுந்தார். இதை பார்த்த சக ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஆசிரியர் குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

தலைஞாயிறு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இறுதி சடங்குகள் இன்று நவ. 30 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.