ஆடல் பாடலுடன்... சமூக வலைதளத்தில் பாடம் நடத்தும் ஆசிரியை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 17 سبتمبر 2023

ஆடல் பாடலுடன்... சமூக வலைதளத்தில் பாடம் நடத்தும் ஆசிரியை!



ஆடல் பாடலுடன்... சமூக வலைதளத்தில் பாடம் நடத்தும் ஆசிரியை!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு பாடங்கள் எளிதில் புரியும் வகையில் ஆடல் பாடலுடன் பாடம் நடத்துவதுடன், சமூக வலைதளம் வழியாகவும் பாடம் நடத்தி வருகிறார்.

பாடங்களை பாடலாக பதிவு செய்யும் ஆசிரியை தமிழகத்தில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் படித்து சாதனை படைத்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. அக்னி நாயகன் அப்துல்கலாம் தொடங்கி, சமீபத்தில் நிலவு மற்றும் சூரியனை ஆய்வு செய்யும் விண்வெளி திட்ட இயக்குநர்களான விஞ்ஞானிகள் வீரமுத்துவேல், நிகர் ஹாஜி என இந்த பட்டியல் நீள்கிறது. அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் அவர்களது ஆசிரியர்களின் கற்பித்தல் திரண் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை போன்று, தான் சொல்லித்தரும் பாடங்கள் மாணவர்களின் மனதில் எளிதில் பதியும் வகையில் ஆடல் பாடலுடன் பாடம் நடத்தி வருகிறார் ஆசிரியை ஒருவர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவர் செட்டிமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 28 ஆண்டுகளாக பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர் கொரனோ காலகட்டத்தில் தனது மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கும் வகையில் பாடங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளம் மூலம் பாடம் நடத்தியுள்ளார்.

கொரோனா காலம் முடிவுக்கு வந்த பின்னரும் ஆசிரியை பாக்கியலட்சுமி, தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளி பாடங்கள் குறித்த குறிப்புகளை ராகங்களுடன் பாடியும், அதற்கு ஏற்றவாறு நடனமாடியும் பதிவு செய்து அதனை மாணவர்களின் பெற்றோர்கள் மூலம் பிள்ளைகளுக்கு அனுப்பி வைத்து சிறப்பான கல்வி சேவையினை மேற்கொண்டுள்ளார். இதே போல் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிலும் கணக்கு துவங்கி அதிலும் மாணவர்களது பாட குறிப்புகளை பதிவிட்டு வருகிறார். ஆசிரியை பாக்கியலட்சுமியின் இந்த முயற்சிக்கு ஏராளமான மாணவர்கள் மட்டுமல்ல அவர்களது பெற்றோர்களும் ரசிகர்களாகி உள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.