அரசு கல்லூரிகளில் கூடுதலாக 1,895 கெளரவ விரிவுரையாளா்கள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 30 نوفمبر 2022

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 1,895 கெளரவ விரிவுரையாளா்கள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 1,895 கெளரவ விரிவுரையாளா்கள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அரசு கல்லூரிகளில் கூடுதலாக 1,895 கெளரவ விரிவுரையாளா் பணியிடங்களுக்கு அனுமதி வழங்கி உயா்கல்வித் துறை சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து உயா்கல்வித்துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணை விவரம்: அரசு கலை-அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்களில் முறையான நியமனம் செய்யப்படும் வரை அல்லது கல்வியாண்டின் இறுதி நாள் வரை, இவற்றுள் எது முந்தையதோ அதுவரை தற்காலிகமாக சுழற்சி 1-இல் ஏற்கெனவே (2021-2022) அனுமதிக்கப்பட்டுள்ள 2,423 கெளரவ விரிவுரையாளா்களுடன் தற்போது கூடுதலாக 1,895 கெளரவ விரிவுரையாளா்களை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் தலைமையிலான குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு தற்காலிகமாக பணியமா்த்த அனுமதி வழங்கப்படுகிறது.

அதற்கான செலவாக ஒரு கெளரவ விரிவுரையாளருக்கு மாதம் ஒன்றுக்கு தொகுப்பூதியமாக ரூ.20 ஆயிரம் வீதம் நிகழாண்டு டிசம்பா் முதல், 2023 ஏப்ரல் வரை ஐந்து மாதங்களுக்கு ரூ.18 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

என்னென்ன வழிகாட்டுதல்கள்?: கெளரவ விரிவுரையாளா்களை நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயா்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிதாக நியமனம் செய்யப்படவுள்ள கெளரவ விரிவுரையாளா் பணியிடத்துக்கு www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதை பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டு, அச்செய்தியை அனைத்து அரசுக் கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும்.

உயா்கல்வித் துறையின் அரசாணை 11.1.2021-இல் வரையறுக்கப்பட்டுள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி பெற்றவா்கள் கெளரவ விரிவுரையாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவா்கள் தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் முதுநிலை, எம்.ஃபில்., பி.ஹெச்டி பட்டம் மற்றும் முதுநிலைப் பட்டத்தில் பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகல்களுடன், மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவமுள்ளவா்களுக்கு பணி அனுபவ அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தற்போது பணியமா்த்தப்படும் கெளரவ விரிவுரையாளா்கள், முறையான நியமனம் பெற எவ்வித முன்னுரிமையும் அளிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.