குடிமைப் பணிகளுக்கான (ஐ,ஏ,எஸ்.,ஐ,.பி.எஸ்.,) 2022-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுப் பயிற்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 31 يناير 2022

குடிமைப் பணிகளுக்கான (ஐ,ஏ,எஸ்.,ஐ,.பி.எஸ்.,) 2022-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுப் பயிற்சி

தமிழகத்தைச் சேர்ந்த இளநிலைப் பட்டதாரிகள் மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் சார்பில் சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்திலும், கோயமுத்தூர், மதுரை ஆகியவற்றில் உள்ள அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி நிலையங்களிலும் மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு கட்டணமில்லாப் பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத்தேர்வு 23.01.2022 அன்று நடைபெற இருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக தமிழக அரசு மாநிலம் முழுவதும் 31.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ஆர்வலர்களின் நலன் கருதி முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்பிற்கான நுழைவுத் தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 01-02-2022 முதல் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே ஒத்திவைக்கப்பட்ட நுழைவுத் தேர்வு 27-02-2022(ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறும். நுழைவுத் தேர்வுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பித்த ஆர்வலர்கள் 21-02-2022 முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை இப்பயிற்சி மைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்தேர்வில் 150 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்கப்பட வேண்டும் என்பதால் ஆர்வலர்களின் கோரிக்கையின் பேரில் இரண்டு மணிநேரத் தேர்வு தற்போது முப்பது நிமிடங்கள் கூடுதலாக்கப்பட்டு மொத்த தேர்வு நேரம் இரண்டரை மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்வு மையங்கள் நிர்ணயம் செய்யப்படும். மேலும் அவ்வப்போது அறிவிக்கப்படும் விவரங்களை அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com மற்றும் தொலைபேசி 044-24621475 வாயிலாக ஆர்வலர்கள் அறிந்துகொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.